செய்தி சுருக்கம் 4/4/2025 - வெள்ளிக்கிழமை

April 05, 2025

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை(5) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விஜயத்தின் போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறு சீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

---‐-------------------

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சதீவு விவகாரத்தில் இடைக்கால தீர்வு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதாவது கச்சதீவு மீட்பில் நிரந்தர தீர்வை எட்டும் வரை இடைக்கால தீர்வாக 99 வருட குத்தகையாக கச்சதீவை பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

---------------------

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று(4) உத்தரவிட்டது. அதாவது பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி இணைத்தல் சத்திய கடிதம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல் தொடர்பான பிரச்சனையின் என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பிலேயே மேற்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.   

---------------------

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கடந்த 20ம் தேதி முதல் இன்று(4) வரை மொத்தமாக 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 482 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டதாகவும் 45 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

----------------------

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக முப்படைகளின் மூன்று குழுக்கள் நாளை விசேட விமானத்தில் மியன்மாருக்கு செல்ல உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மருத்துவ உதவிகளை வழங்க வைத்தியர் குழு ஒன்றும் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நில நடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3145 ஆக உயர்ந்துள்ளதுடன் 221 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

----------------------

உலகின் மிகச் சிறிய Pacemaker, அதாவது இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்த பயன்படுத்தும் கருவியை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அரிசியை விட சிறிய அளவில் காணப்படும் இது உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்குள் சென்று விடக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. இதய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

---------------------

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் 13 வரை சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அரசினால் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிவாரண பொதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர் குறித்த நிவாரண பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.  

-------------------

காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான சிவகங்கை கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் சீராக இடம்பெறுவதாக அந்தக் கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

------------------------

டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34 சதவீத பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரியை அடுத்த வாரம் முதல் அமுல்படுத்த இருப்பதாக சீனா அறிவித்துள்ளது இது இரு நாட்டு வர்த்தகத்தையும் பெருமளவு பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது இதே வேலை அமெரிக்காவின் பங்குச் சந்தையானது வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                   xxxxxx
செய்தி சுருக்கம் 4/4/2025 - வெள்ளிக்கிழமை செய்தி சுருக்கம்  4/4/2025 - வெள்ளிக்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 05, 2025 Rating: 5

3/4/2025 - செய்திச் சுருக்கம்

April 04, 2025


இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார். 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம் போக்குவரத்து விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2024 டிசம்பர் மாதம் வரையான நிலவரப்படி, மோட்டார் வாகன ஆணையாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 54,513 ஆகும். இதில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், இது சுமார் 49 இலட்சத்து 22,000 ஆகும். 2வது அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனம் முச்சக்கர வண்டிகள். இது 11 இலட்சத்து 85,000 ஆகும். நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 72% மானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்றும், இதன் விளைவாக, இந்த வாகனங்களே அதிக விபத்துக்களை சந்தித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 2023 ஆம் ஆண்டில் 2,231 அபாயகரமான வீதி விபத்துகள் நடந்துள்ளன, அவற்றில் 2,341 உயிரிழப்புகள் இடம்பெற்றிருந்தன. 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2,403 விபத்துகளில், 2,521 பேர் மரணித்துள்ளனர். 
Xxxxxxxxxxxxxxxxxxx


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது. இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும். இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
Xxxxxxxxxxxxxxxxxxxxxc


அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்களின் ஊடாக ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணம் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்ததை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்ணில் இன்று (03) குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. 
Xxxxxxxxxxxxxxxxx


தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
Xxxxxxxxxxxxxxxx


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
3/4/2025 - செய்திச் சுருக்கம் 3/4/2025 - செய்திச் சுருக்கம் Reviewed by Irumbu Thirai News on April 04, 2025 Rating: 5

2/4/2025 - செய்திச் சுருக்கம்

April 03, 2025


2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
----------------------------------------------------

செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
----------------------------------------------------

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று தெரிவித்தார். துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 
----------------------------------------------------

ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. 
----------------------------------------------------

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை சங்க சபையிலிருந்து நீக்குவதற்கு இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் செயற் குழு தீர்மானித்துள்ளது. ராஜாங்கனையே சத்தாரதன தேரர் யூடியூப் செனலை நடத்தி சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அண்மையில் பெரும் சர்ச்சை உருவாகியது. 
----------------------------------------------------

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
----------------------------------------------------

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். 
----------------------------------------------------

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
----------------------------------------------------

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
----------------------------------------------------

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். 
----------------------------------------------------

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 ----------------------------------------------------

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தொடர்ச்சியாக நான்காவது முறையாக தடையின்றி தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மூன்று குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (01) நடைபெற்ற அந்த பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மனித வள மற்றும் ஊதியக் குழு, நிதி மற்றும் வணிகக் குழு, மற்றும் பரிந்துரைக் குழு ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
----------------------------------------------------
2/4/2025 - செய்திச் சுருக்கம் 2/4/2025 - செய்திச் சுருக்கம் Reviewed by Irumbu Thirai News on April 03, 2025 Rating: 5
Powered by Blogger.