Results for Politics

கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்...

July 20, 2022

1993 ஆர். பிரேமதாச குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் டீ. பி விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட அப்போதைய சபை முதல்வராக இருந்த ரனில் பிரதமராக நியமிக்கப்படுகிறார். 

அதன் பின் கட்சியிலிருந்து பிரிந்து சென்றிருந்த காமினி திஸாநாயக்க போன்றவர்களும் கட்சியில் இணைய கட்சி பலம் பெற்ற போதிலும் சந்திரிக்கா அலையில் அள்ளுண்டு போனது. 

1994 ல் நடந்த பொதுத் தேர்தலில் PA 105, UNP 94 என ஆசனங்கள் பகிரப்பட்டன. கடைசியில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட காமினியிடம் பறிகொடுத்து விட்டு நின்றார் ரனில். 105 ஆசனங்களை வென்ற சந்திரிக்கா SLMC இன் 7, சந்திரசேகரினின் 1 ஆசனம் கொண்டு ஆட்சியமைத்தார். 

மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக காமினியிடம் தோற்ற ரனில் காமினி தேர்தல் பிரசாரத்தில் கொல்லப்பட பதில் வேட்பாளராக முன்வரும் வாய்ப்பு இருந்தும் கொல்லப்பட்ட காமினியின் மனைவிக்கு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். 

பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டியுடன் தோல்வி. 

2000 பொதுதேர்தலில் PA 107, UNP 89 என்று தோல்வி. 

அதன் பின்னர் UPFA இல் பாங்களிக் கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆட்சி கவிழ 2001 தேர்தல். அங்கே UNP 109, PA 77, என ஆசனங்களை வென்றது. SLMC 5 ஆசனங்களையும் கொண்டு போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார் ரனில். 

ஆனால் அவரால் ஆட்சிக் காலத்தை பூரணப்படுத்த முடியவில்லை. 2004 பாராளுமன்றம் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல். அங்கே UPFA 105, UNP 82 பெற்றது. 

2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுடன் போட்டியிட்டு தோல்வி. 

2009 ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தி. அதிலும் தோல்வி. 

2010 பொதுதேர்தலில் UPFA 144, UNP 60. 

அதன் பின்னர் 2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்ரியை களமிறக்கி வெற்றி பெற்று 42 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதமரானார் ரனில். 

தொடர்ந்து 2015 பொதுத்தேர்தலில் UNP 106, UPFA 95 பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்கிறார். 

2018 அக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையே உருவான கருத்து முரண்பாட்டினால் அவரை பதவி நீக்கம் செய்து மஹிந்த பிரதமராக்கப்பட நீதிமன்றம் சென்று மீண்டும் பிரதமரானார். 

அதனைத் தொடர்ந்து 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் ஐ போட்டியிட சொல்லி ஒதுங்கி விட்டு அதில் சஜித் தோற்ற போது பிரதமர் பதவியை இழந்தார். 

பின்னர் 2020 பொதுத்தேர்தல் நடந்தது. அதில் SLPP 145 + (SLFP 1, EPDP 2, NC 1, TMVP) 1 UNP 1 என்ன ஆசனங்களை பகிர்ந்து கொள்ள தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஒற்றை ஆசனத்தை வைத்துக் கொண்டு பாராளுமன்றம் வருகிறார் ரனில். அதுவும் 10 மாத இழுபறிக்குப் பின்னர். 

1994 ல் 94, 2000 ல் 89, 2001 ல் 109, 2004 ல் 82, 2010 ல் 60, 2015 ல் 106 உறுப்பினர்களை கொண்டு செய்ய முடியாததை, ஒரே ஒரு உறுப்பினரை வைத்து சாதித்துள்ளார் ரனில். இதனை திறமை என்பதா? குருட்டு அதிஷ்டம் என்பதா? தந்திரம் என்பதா? விதி என்பதா? 

எது எவ்வாறாக இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. மக்கள் பல சிக்கல்களுக்குள் மாட்டி இருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு, கேஸ் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு, உணவுப் பொருள் விலையேற்றம் என மக்கள் பிரச்சினைகள் ஒரு புறம். 

ஏற்றுமதி வீழ்ச்சி, சுற்றுலா பிரயாணிகள் வருகை வீழ்ச்சி, வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட ரீதியாக வங்கி மூலம் பணம் அனுப்பாமை போன்ற பல சவால்கள் ஒருபுறம். 

ரனில் கடந்து வந்த பாதை ஒன்றும் பூப்பாதை அல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை. கடக்க இருப்பதும் கரடு முரடான பாதை. 

1974 ல் செயற்பாட்டு அரசியலுக்கு வந்து, 1977ல் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, கல்வி, தொழில் நுட்பம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட மிகப் பெரிய அமைச்சுக்களை வகித்து, பாராளுமன்றத்தில் சபை முதல்வராக இருந்து, 6 முறை பிரதமராக பதவி வகித்து, எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து, எதிர்க்கட்சியின் ஒரு எம்பியாகவும் செயற்பட்டு அனுபவம் இருக்கும், நிறைய வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாக சொல்லும் ரனில் மூலம் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? பார்க்கலாம் அனுபவமும், திறமையும் அவருக்கு கை கொடுக்கிறதா? கைவிடுகிறதா என்று. 

புதிய ஜனாதிபதி அதிமேதகு இல்லை இல்லை... மன்னிக்கவும் அவர் அப்படி சொல்ல வேண்டாம் என்று சொல்லியுள்ளார். எனவே கெளரவ ரனில் விக்ரமசிங்ஹ அவர்களுக்கு இரும்புத்திரை நியூஸ் இணைய தளத்தின் வாழ்த்துக்கள். 

எது எவ்வாறாயினும் மக்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

- Fayas M. A. Fareed.



Related:


கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்... கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்... Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி

July 20, 2022

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் தற்போதைய பதில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க.

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றனர்.

இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது இந்த வாக்கெடுப்பு ஆரம்பமானது. 

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் ஆயுதமேந்திய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும அனுரகுமார திசநாயக்க ஆகியோர் இதில் போட்டியிட்டனர். SJB தனது ஆதரவை டளசுக்கு வழங்கியதோடு பிரதமர் பதவியை சஜித் பெறுவதற்கான உடன்பாடும் எட்டப்பட்டிருந்தது. இதனால் சஜித் போட்டியில் இருந்து விலகினார். 

இன்றைய வாக்களிப்பில் சபாநாயகரும் கலந்து கொண்டதோடு பாராளுமன்ற செயலாளர் அவர்கள் தேர்தலை நடத்தும் தெரிவித்தாட்சி அலுவலராக கடமையாற்றினார். 

இதே வேளை இன்றைய வாக்கெடுப்பில் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஜி ஜி பொன்னம்பலம் ஆகியோர் வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டனர். மேலும் 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனவே 219 வாக்குகளே செல்லுபடியான வாக்குகள் ஆகும். 

பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தனது சுகவீனத்துக்கு மத்தியிலும் சேலைன் ஏற்றப்பட்ட நிலையில் வந்து வாக்களித்தமே குறிப்பிடத்தக்கது. 

1993 ரணசிங்க பிரேமதாசாவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டி பி விஜயதுங்க இவ்வாறு பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டதனால் வாக்களிப்பு இடம் பெறவில்லை. 

ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மூவர் போட்டியிட்டமையினால் வாக்களிப்பு இடம்பெற்றது. எனவே இது பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்த முதல் சந்தர்ப்பமாகும். மேலும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகும். 

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் வரை இவர் பதவியில் இருப்பார். 

எவ்வாறாயினும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். தனக்கு வாக்களித்தவர்களை திருப்திபடுத்தவும் வேண்டும். போராட்டக்காரர்களின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து அதன்படியும் செயல்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வேண்டும். 

எனவே ஜனாதிபதியின் இந்த எஞ்சிய பதவிக்காலம் சவால் மிக்கதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

வெல்லுமா ரனிலின் தந்திரம்?

July 20, 2022

இலங்கை அரசியலில் தந்திரத்துக்கு புகழ் பெற்றவர் ரனில். 6 முறை பிரதமராக பதவி ஏற்றவர். ஒரு முறையேனும் பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. அநேகமான தன்னுடைய தந்திரத்தின் மூலம் எல்லாம் சாதிக்கலாம் என்ற சிந்தனையில் எதையுமே சாதிக்காமல் போன தலைவனாகவே ரனில் நோக்கப்படுகிறார். 

இந்நிலையில் 2020 பொதுத் தேர்தலுக்கான எல்லா தந்திரங்களும் பொய்த்துப் போய் தேசிய ரிதியாக கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் திருப்திப்பட வேண்டி ஏற்பட்டது. அதற்கும் ஒருவரை நியமிக்க உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் 10 மாதங்கள் கழித்து ஒற்றை உறுப்பினராக எதிர்க்கட்சியில் அமர்ந்த ரனில் இன்று பதில் ஜனாதிபதியாக, சிலவேளை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வலுவான சாத்தியங்களுடன் இருக்கிறார். 

கோட்டாவை பதவி விலகச் செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள் இம்மாத ஆரம்பத்தில் தீர்க்கமான கட்டத்தை அடைந்தன. 9 ஆம் திகதி தேசிய ரீதியான மாபெரும் எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இணக்கப்பாட்டு அரசு ஒன்றை உருவாக்கிக் கொள்ள பல பேச்சுவார்த்தைகளை நாடாத்தின. கோட்டா பதவி விலகும் பட்சத்தில் யாரை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவது உள்ளிட்ட பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. ஒருவாறு கோட்டா பதவி விலகலோடு புதிய ஜனாதிபதி தேர்வு விடயம் மேடைக்கு வந்தது. கடைசியில் 4 பேர் போட்டியிடும் நிலைமை உருவானது. சம்பிக்க, பொன்சேகா இருவரும் போட்டியிடும் ஆர்வத்தில் இருந்த போதிலும் போட்டியிடவில்லை. இங்கே ரனில் தன் விளையாட்டை ஆரம்பிக்கிறார். 

ரனிலை பிரேரித்து ஆதரவு அளிப்பது SLPP. 1993 ல் இருந்து ரனில் எதிர்ப்பு அரசியல் முகாமில் அரசியல் செய்யும் SLPP இனரில் எத்தனை பேர் தமக்கு வாக்காளிப்பார்கள் என்பதை ரனிலால் மட்டுமல்ல. யாராலும் ஊகிக்க முடியாது. எனவே ரனில் தன்னுடையை வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியை மட்டுமல்லாது எதிராணி வாக்குளை உடைக்கும் வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 

சஜித் கேட்டால் SLPP இன் விரல் விட்டெண்ணக் கூடிய ஓரிருவர் சஜித்க்கு வாக்கு அளிப்பார்கள். ஆனால் SLMC, ACMC தெளிவாக சஜித் ஐ ஆதரிக்கும். அதே போன்று TNA வும் சஜித் ஐ ஆதரிக்கும். 

மறுபுறம் சஜித் – டலஸ் கூட்டை விட டலஸ் தனியாக கேட்கும் போது SLPP இன் உறுப்பினர்களில் அதிகமானோர் டலஸ்க்கு வாக்காளிக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கும். இதனை நன்றாக திட்டமிட்ட ரனில் அநேகமாக சஜித் – டலஸ் கூட்டையே விரும்பி இருப்பார். 

மறுபுறம் SLPP இல் இருந்த மிகத் தீவிர இனவாதிகளாக அறியப்பட்ட பலர் தமது ஆதரவை டலஸ் கூட்டுக்கு தெரிவித்து வருகின்றனர். SLPP இன் முன்னணி தலைவர்களான பலர் மெளனம் காக்கும் போது வெறும் இனவெறியை மட்டுமே மூலதனமாக்கி அதன் மூலம் பாராளுமன்றம் வந்து, பதவிகளைப் பெற்று, கையாலகாதவர்கள் என்று மக்களிடம் பெயர் பெற்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் மிகக் குறைவாக உள்ள சன்ன ஜயசுமண, நாலக கொடஹேவா, ரத்ன பிக்கு போன்றோர் பகிரங்கமாக பேசுவதில் பல உள்குத்துக்கள் இருக்கலாம். அதன் விளைவாக டலஸ் சஜித் கூட்டு இனவாதிகளின் கூடாரம் போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, விமல் கம்மன்பில வின் 10 கட்சி கூட்டும் அங்கே உள்ளது. போதாக்குறைக்கு முன்னொரு காலத்தில் டலஸ், கம்மன்பிலவுடன் மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை ஏந்திய படம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது. ரனிலின் தேவையும் அதுவே. அதன் விளைவாக TNA, ACMC, SLMC உள்ளிட்ட சிறுபான்மைக் காட்சிகளின் வாக்கை தம்பக்கம் ஈர்க்க முடியும் என நம்புகிறார். அநேகமாக அந்த நம்பிக்கை வீண் போகாத நிலை உருவாகி வருவதாகவே தோன்றுகிறது. 

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அநேகமான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுத்தீன், தெளபீக் ஆகிய முஸ்லீம் பா. உ க்களைத் தவிர ஏனைய எல்லா முஸ்லீம் உறுப்பினர்களின் ஆதரவும் ரனிலுக்கு என்றே அறிய வருகிறது. 

அது தவிர SLFP உத்தியோகபூர்வமாக தமது ஆதரவு டலஸ்க்கு என்று அறிவித்த போதிலும் அவர்களில் பலர் ரனிலின் வலையில் வீழ்ந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. 

இது தவிர நேற்று நடந்த TNA வின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போது தொடர்பு கொண்ட இந்திய உயர் ஸ்தானிகரலாயத்தின் பிரதித் தூதுவர் டலஸ்க்கு வாக்காளிகுமாறுகேட்டு கொண்டதாகவும், அதனை உடனேயே ரனிலிடம் உள்ளிருந்த யாரோ எம்பி போட்டுக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இந்தியா ரனிலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில், இதை ரனில் இந்திய மேல் மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அநேகமாக இது இந்திய உளவு அமைப்பான ரோ வின் நகர்வு என்றே நம்பலாம். 

பொதுவாக கொழும்பில் உள்ள பல மேற்கு நாட்டு தூதுவராலயங்கள் ரணிலுக்கு பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும், கட்சித் தலைவர்கள் பலருக்கு அது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக்கவும் சொல்லப்படுகிறது. 

இதை விட ரனிலின் மற்றோரு மாஸ்டர் plan சஜித் ஐ டலஸ் உடன் கூட்டு வைக்க தூண்டியதன் மூலம் SJB இன் பல வாக்குகளை கவர்வதாகும். இதன் மூலம் சஜித் தலைமையை ஏற்க தைரியம் அற்றவர் என்ற சிந்தனையை மக்களுக்கும், SJB உறுப்பினர்களுக்கும் வழங்கலாம். நீண்ட கால அடிப்படையில் SJB இன் கட்டமைப்பை சிதைக்கும் ஒரு நகர்வாகவும் இதனை கருதலாம். 

ஆரம்பத்திலேயே டலஸ் சஜித் கூட்டு உருவாகி இருந்தால் பொன்சேகா அல்லது வேறு ஒருவர் சுயேச்சையாக முன்வந்து SJB இன் வாக்குளை உடைத்திருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் இந்த நகர்வு ஏற்பட்டமையானது அவ்வாறு ஒருவர் வந்து போதுமான ஆதரவை திரட்டிக் கொள்ள போதுமான அவகாசத்தையும் இல்லாமல் செய்து விட்டது. 

ஏற்கனவே, தலைமை ஏற்க தைரியம் அற்ற தலைவர் சஜித் என்று UNP இன் செயலாளர் பாலித ரங்கே பண்டார இழிந்துரைத்தார். இதனால் எதிர்காலத்தில் SJB இல் தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை என்ற செய்தியை SJB எம்பிக்களுக்கு வழங்கி ரனிலுடன் இணைவதன் மூலம் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று உடைக்க திட்டமிட்டு இருக்கலாம். 

அநேகமாக தற்போதைய நிலையில் ரனில் வென்றாலும் ரனில் ஆதரவு வாக்கில் அவர் வெல்லப் போவதில்லை. மாறாக வேறு தெரிவற்ற SLPP இன் வாக்குகள், டலஸ் - சஜித் கூட்டை விரும்பாத ஆனால் ரனில் மீதும் விருப்பற்ற SLPP இன் வாக்குகள்,டலஸ் - சஜித் இணைவை விரும்பாத SJB வாக்குகள், சஜித் மீது நம்பிக்கையிழந்த SJB வாக்குகள், டலஸ் உடன் கூட்டுச் சேர்ந்துள்ள இனவாதிகள் காரணமாக வெறுப்புற்ற சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் வாக்குகள் என்பவற்றினாலேயே வெல்லப் போகிறார். ஒட்டு மொத்தத்தில் 4 முனைப் போட்டி இருந்த சந்தர்ப்பத்தில் இருந்ததை விட, தற்போது ரனிலின் வாய்ப்பு பிரகாசமானது. 

-  Fayas M. A. Fareed.


வெல்லுமா ரனிலின் தந்திரம்? வெல்லுமா ரனிலின் தந்திரம்? Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

வெற்றி யாருக்கு? கள நிலவரம்...

July 20, 2022

கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. 
 
அதில் 03 பேர் போட்டியிடுகின்றனர். தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ, SLPP இன் உறுப்பினரும் பா. உ ஆன டலஸ் அழஹப்பெரும, NPP இன் தலைவரான அனுர குமார திசாநாயக்க ஆகியோரே அவர்கள். 
 
நாம் ஏற்கனவே எதிர்வு கூறிய டலஸ் மற்றும் சஜித் கிடையிலான உடன்பாடு எட்டுப்பட்டமையினால் சஜித் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக அவர் டலஸ் இன் பெயரை பிரேரித்தார். 
 
அனுர வெற்றிக்காக போட்டியிடவில்லை. மற்றைய தரப்புக்களோடு ஒப்பிடும் போது கொள்கை அரசியல் செய்யும் அவருக்கும் அவர் சார்ந்த கூட்டணிக்கும் மற்றைய இருவரில் ஒருவரை தெரிவு செய்ய முடியாத கொள்கை முரண்பாடுகள் உள்ளன. எதிர்கால அரசியல் எதிர்பார்ப்பு இல்லாத ஒருவரை முன்னிறுத்தி அனைத்துக் கட்சி ஆட்சி ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சி தோல்வி கண்டு விட்டது. 
 
பெரிய கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு செல்ல தயாரில்லை. இந்நிலையில் NPP இன் மூன்று உறுப்பினர் தவிர்ந்த வேறு வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தாலே அவர்கள் வென்றது போலதான். ஆனால் ஓரிரு வாக்குகள் கூடுதலாக கிடைக்கலாம். 
 
பிரதான போட்டி டலஸ் மற்றும் ரணில் இடையேதான். அதன் அடிப்படையில் மொத்தமுள்ள 225 இல் NPP இன் மூன்று தவிர எஞ்சியுள்ள 222 ஐ பகிர்ந்து கொள்ளவே போட்டி நடக்கவுள்ளது. 
 
இவர்களில் பெரும்பாலானோர் SLPP இன் உறுப்பினர்கள். நடப்பு பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை SLPP தேர்தலில் 145 ஆசனங்களை வென்றிருந்தது. அவர்களோடு கூட்டணியில் இருந்த அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், யாழ் மாவட்டத்தில் தனியாக போட்டியிட்ட SLFP ஒரு ஆசனத்தையும், சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான TMVP ஒரு ஆசனத்தையும், டக்ளஸ் தேவாநந்தாவின் EPDP இரண்டு ஆசனங்களையும் பெற்று 150 ஆசனங்களை கொண்டிருந்தது. 
 
எனினும் அது இப்போது பல தூண்டுகளாக உடைந்து உள்ளது. விமல் தலைமையில் 10 கட்சிக் கூட்டணி, SLFP இரண்டு பிரிவுகளாக உள்ளது. அனுர பிரியதர்ஷன சுசில் தலைமையில் மற்றொரு 14 பேர் கொண்ட அணி, இப்போது டலஸ் வேட்புமனு தாக்கல் செய்ததோடு SLPP இன் தவிசாளர் ஜிஎல் உடன் இன்னொரு குழு என பல பிரிவுகள். 
 
யார் என்ன சொன்னாலும் SLPP இன் இந்த பிரிவுகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகும். SJB க்கு தேர்தலில் 54 ஆசனங்கள் கிடைத்தது. அவர்களின் கூட்டணி கட்சிகளான SLMC, ACMC என்பன தனியாக போட்டியிட்டு தலா ஒரு ஆசனத்தை வென்றிருந்தது. அத்தோடு முஸ்லீம் ஐக்கிய கூட்டமைப்பு என்ற பெயரில் புத்தளம் மாவட்டத்தில் ஒரு உறுப்பினருமாக 57 பேர் இருந்தனர். 
 
20 ஆம் சீர்திருத்த வாக்கெடுப்பு நிகழ்ந்த போது SLPP இன் விஜேதாச ராஜபக்க்ஷ அதனை எதிர்த்து வாக்காளித்தார். SLMC, ACMC இன் உறுப்பினர்கலும், முஸ்லீம் கூட்டமைப்பின் புத்தளம் உறுப்பினரும், மனோ கணேஷனின் அரவிந்த குமார் எம்பியும் அரசுடன் இணைந்து கொண்டனர். 
 
தற்போதைய நிலையில் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள்? எந்தக் கொள்கையில் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையே உள்ளது. எனினும் கிடைக்கின்ற உள்ளக தகவல்களை வைத்து பார்க்கும் போது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் மூலம் ஒரே ஒரு ஆசனம் பெற்று வந்த ரணில் விக்ரமசிங்ஹவின் கையே ஓங்கி இருப்பதாக தெரிகிறது. 
 
பொதுவாக இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக பதவிக்களுக்கான பேரம் பேசலில் இருப்பதாக தெரிகிறது. சில வேலை சற்று ஒதுங்கி இருக்கும் கருப்பு நிற பறவையின் கருப்பு பணமும் சூட்கேஸ் வழி கை மாறலாம். இலங்கை அரசியலில் அது ஒன்றும் புதிதல்லவே. 
 
 தற்போதைய நிலையில் சில அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் தம்முடைய ஆதரவு யாருக்கு என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்புக்களின் பின்னர் அந்தக் கட்சிகளில் சில விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. அதிக ஆசனங்களைக் கொண்ட SLPP பல பகுதிகளாக பிரிந்து உள்ளது என்று ஏலவே பார்த்தோம். 
 
கட்சியின் உறுப்பினரான டலஸ் போட்டியிடுவதாக சொன்ன நிலையில் கட்சியின் ஆதரவு ரணில்க்கு என்று செயலாளர் அறிவிக்க, அது எப்படி என்று தவிசாளர் போர்க்கொடி தூக்கினார். அது தவிர தேசிய ரீதியில் அறியப்பட்ட பல பின்வரிசை உறுப்பினர்கள் அவ்வாறான தீர்வு ஒன்று கட்சியால் எடுக்கப்படவில்லை என்று உள்ளக முரண்பாட்டை பகிரங்கமாக கூறினார். 
 
மறுபுறம் SJB இலும் ரணில்க்கு சார்பான ஒரு குழு உருவாகி இருக்கலாம் என்றும், சஜித் வேட்பாளராக களம் இறங்காமல் போனால் அவர்கள் ரணில்க்கு வாக்காளிக்கலாம் என்ற நிலையும் காணப்பட்டது. மறுபுறம் இன்று காலை டலஸ் க்கு ஆதரவு வழங்குவது என்ற கடைசி முடிவு எடுக்கப்பட்ட சமயத்தில் கூட சஜித் போட்டியிடவில்லை என்றால் தனக்கு போட்டியிட அனுமதிக்குமாறு சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்ததாகவும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 
 
ஏற்கனவே, SJB இல் இருந்த 57 பேரில் சுமார் 7 பேர் 20 க்கு கை தூக்கவும், இன்னும் இருவர் ரணிலுடன் ஆட்சியமைக்கவும் சென்று விட்ட நிலையில் இருக்கும் 50 க்கும் குறைவானவர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதியை  தெரிவு செய்வதை மட்டுமல்ல அரசுக்கு எதிராக துரும்பைக் கூட நகர்த்த SJB இனால் முடியாது. 
 
இந்நிலையிலேயே SLPP இல் உருவான பிளவுகளை வைத்து பதவியைப் பிடிக்கும் வேலையை SJB ஆரம்பித்தது. ஜனாதிபதி ஆக சாதாரண பெரும்பான்மையே போதும். SJB க்கு ஒருபுறம் மேலதிகமாக தேவைப்படும் மேலதிக உறுப்பினர்களை தேடிக் கொள்ளும் சவால் ஒருபுறம். ரணிலின் வேட்டையில் இருந்து தம் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் சவால் ஒருபுறம் என்ன சஜித் இன் நிலை பரிதாபமானது. 
 
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 150+ ஆதரவு தமக்கு இருப்பதாக வாய் சவடால் எல்லாம் விடப்பட்டது. எனினும், டலஸ் கேட்கும் நிலையில் SLPP இன் ரணில் எதிர்ப்பு அணியின் வாக்குகள் எல்லாம் டலஸ் க்கு கிடைக்கும் சாத்தியமே காணப்பட்டது. 
 
SLFP இன் வாக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித்க்கு என்று செயலாளர் தயாசிறி சொல்ல, ஒன்றுக்கு மேற்பட்டோர் வேட்பாளர்களாக வந்தால் தாம் யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று தலைவர் மைத்ரி சொன்னார். மறுபுறம் நிமல் சிறிபால, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சுமார் 10 உறுப்பினர்களின் ஆதரவு ரணிலுக்கு என்று தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இன்று மாலை SLFP டலஸ் க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. மைத்ரிக்கு சபாநாயகர் பதவிக்கான Offer ஒன்று பற்றிய தகவல்கள் கூட வெளி வந்துள்ளன. 
 
டலஸ் கேட்பதால் விமல் தலைமையிலான 10 கட்சி கூட்டணி சஜித் ஐ ஆதரிக்காது என்று சிக்னல்களை வெளிக்காட்டியது. சஜித் பின்வாங்க இது முக்கிய ஒரு காரணம். விமல் அணி டலஸ் ஐ ஆதரிக்க முடிவு செய்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவும் டளசுக்குதான். அவர்களுடன் 10 உறுப்பினர்கள் உள்ளனர். சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏற்கனவே பகிரங்கமாக சொல்லி விட்டார். 
 
பெரிய கட்சிகளில் இருந்து பிரிந்து தனித்தனியாக இருக்கும் சில உறுப்பினர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது. என்னதான் வெற்றி தோல்வியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கில் தங்கி இருந்த போதிலும் அதற்கு வெளியே உள்ள போராட்டக்காரர்களின் தாக்கம் அவர்கள் மீது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக அவர்கள் ரணில் ஜனாதிபதியாக வந்தால் போராட்டம் தொடரும் என்ற செய்தி, போராட்டத்திற்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம் என்பனவும் கட்சித் தலைமைகளின் முடிவுகளைப் போலவே எம்பிகள் தம் தீர்மானங்களை எடுப்பதில் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கலாம். 
 
ரணில்க்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவே உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் சமூகத்தில் அதன் தாக்கம் பேரணிகளாய், போராட்டங்களாய் வீதிகளில் எதிரொலிக்கிறது. 
 
இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் புள்ளடி தீர்மானிக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இலங்கையின் முதற் பிரஜை யார் என்று... 
 
- Fayas M. A. Fareed.
 
வெற்றி யாருக்கு? கள நிலவரம்... வெற்றி யாருக்கு? கள நிலவரம்... Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

கோத்தாபய அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் தமிழ் வடிவம்

July 16, 2022


கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்காக சபாநாயகருக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே தருகிறோம். 

நாட்டிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு செயல்படுவதாகவும் அந்த ராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறித்த ராஜினாமா கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே காணலாம்.


கோத்தாபய அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் தமிழ் வடிவம் கோத்தாபய அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் தமிழ் வடிவம் Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்...

July 16, 2022

ஊழலுக்கு எதிரான இலங்கை மக்களின் போராட்டத்தில் முக்கிய குறியீடு ரஞ்சன் ராமநாயக்க. தன்னுடைய கட்சியே என்றாலும் கடுமையாக விமர்சனம் செய்வதன் காரணமாகவும், இலங்கையின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதாலும், இலங்கையின் ஜனரஞ்சக அரசியவாதி விஜேகுமாரதுங்கவின் உறவினர் என்பதாலும், வாய்ப் பேச்சில் வீரர் என்பதாலும் தினமும் ஊடகங்களுக்கு தீனி போடும் அரசியல்வாதியாக திகழ்ந்தார். 

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் குற்றவாளியான அவர் சிறைத்தண்டனைக்கு உட்பட்டார். அன்றிலிருந்து அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரஞ்சன் கருணை மனு அளித்தால் பரிசீலிக்க தயார் என்று கோட்டா சொன்ன நிலையில் ரஞ்சன் தரப்பு அதற்கு தயாராக இருக்கவில்லை. 

இந்நிலையில் அவரின் சிறைப்படுத்தலுக்கு எதிராக SJB எம்பியான ஹரின் நிறைய பேசினார். கருப்பு சால்வை அணிந்து பாராளுமன்றம் வந்தார். அமைச்சுப் பதவி பெறும்வரை கருப்பு சால்வையுடனே பாராளுமன்றத்தில் இருந்தார். 

இப்போது அவர் ஆதரித்த ரணில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களுடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து விட்டடார். இந்நிலையில் ரஞ்சனின் விடுதலை குறித்து ஹரின், மனுஷ இருவரும் ரனிலை சந்தித்து உரையாடியாதாகவும், அவர்களுக்கு செவிமடுத்த ஜனாதிபதி ரணில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்க்ஷவிடம் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரி இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. 

ஜனாதிபதி கனவில் உள்ள ரணில் இந்த விடுதலையை செய்வதன் மூலம் ஊழலுக்கு எதிரான முகாமில் தாம் இருக்கிறேன் என்ற செய்தியை அழுத்தமாக சொல்ல எதிர்பார்ப்புதாகவே தோன்றுகிறது. அதன் மூலம் SJB தரப்பின் சில வாக்குகளை திரட்டும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த பணிக்கு பயன்படுத்திக் கொள்ள உததேசிக்கும் ஹரின் மனுஷ இருவருக்கும் இது உந்துதலாக அமையும். 

இந்த விடுதலை 20 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக ஒரு சில வாக்குகளையேனும் பெற்றுக் கொள்ளலாம் என ரணில் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம். ரஞ்சன் விடுதலை செய்யப்படுவாரா? 

ரஞ்சன் விடுவிக்கப்பட்டால் தன்னுடைய MP பதவியை ராஜினாமா செய்து ரஞ்சன் மீண்டும் பாராளுமன்றம் வர வழிவிடுவேன் என்று சொன்ன ஹரின் ராஜினாமா செய்வாரா? அதற்கு பதிலாக SJB செயலாளர் நியமிக்க வேண்டிய உறுப்பினரை SJB இல் இருந்து வெளியேறி உள்ள ஹரின் பேச்சைக் கேட்டு நியமிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

-Fayas M. A. Fareed.


Related:





ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்... ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை....

July 16, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி ரணில் விக்கிரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக கடமையேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் பதவி விலகல் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டாலும் 14 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே அவர் இராஜினாமா செய்துள்ளார். எனவே, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளது. 
 
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன 1978 ல் பதவியேற்ற பின் வரலாற்றில் இரண்டாம் முறையாக தனது பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ய முன்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி உள்ளது. 1993 மே ௦1 ஆம் திகதி குண்டு வெடிப்பில் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ கொல்லப்பட்டமையினால் ஒருமுறை வெற்றிடமானது. அப்போது பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க பதில் ஜனாதிபதியானார். அது ஜனாதிபதியின் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடமாகும். ஆனால் ஜனாதிபதியொருவர் ராஜினாமா செய்ததால் வெற்றிடம் ஏற்படுவது இதுவே முதல் தடவையாகும்.
 
அப்போதெல்லாம் கட்சி என்பது ஒரு கட்டுக் கோப்பில் இருக்கும். அதே போன்று கட்சியில் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த லலித், காமினி போன்றோர் வெளியேறி இருந்தமை (லலித் கொல்லப்பட்டிருந்தார்) போன்றவற்றால் டி.பி. விஜெதுங்கவுக்கு போட்டி எதுவும் இருக்கவில்லை. பிரேமதாஸவின் வலது கையாக இருந்த சிறிசேன குரே போன்றவர்களை ஓரம் கட்டிய ரணில் முன்னே வந்து டி.பி. விஜதுங்கவை முன்மொழிந்து ஜனாதிபதியாக்கினார். ஆளும் கட்சிக்கு தேவையான பலம் அப்போது இருத்தது. குழப்ப நிலை இருக்கவும் இல்லை. 
 
ஆனால் இப்போதைய நிலை மாறுபட்டது. சமூக வலைத்தளங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் எம்பிக்களின் ஒவ்வொரு நகர்வும் மக்களால் அவதானிக்கப்படுகிறது. மக்கள் நிறைய தேடித் தெரிந்து கொண்டுள்ளனர். 1993 ல் போன்று புதிய ஜனாதிபதி இவர்தான் என்று ரேடியோவில் சொல்வதைக் கேட்டுக் கொண்டு செல்லும் மனநிலையில் மக்கள் இல்லை. யாப்பு என்ன சொல்கிறது? அதன் அடிப்படையில் எல்லாம் நடைபெறுகிறதா? என்பது போன்ற பல விடயங்களை மக்கள் தேடுகிறார்கள். 
 
அதன் அடிப்படையில் தற்போதைய நிலை தொடர்பில் யாப்பு என்ன சொல்கிறது என்பது குறித்து இந்த கட்டுரையின் அடுத்து வரும் பகுதிகள் அமையும். 
 
பதவிக் காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி ஒருவரின் பதவி வெற்றிடமாதல் தொடர்பில் அரசியல் யாப்பின் 38 ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. 38-1 ஜனாதிபதி பதவி பின்வரும் சூழ்நிலைகளில் வெற்றிடமாகும். 
 
அ) அவர் இறப்பதன் மேல். 
ஆ) அவர், சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் தம்கைப்பட்ட கடிதத்தின் மூலம் பதவியைத் துறந்தால். 
இ) அவர் இலங்கையின் ஒரு பிரசையாக இல்லாதொழிந்தால். 
ஈ) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட ஆள், தமது பதவிக் காலம் தொடங்கிய திகதியிலிருந்து இரு வாரங்களுக்குள் வேண்டுமென்றே பதவியேற்கத் தவறினால். 
உ) அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால். (அது தொடர்பான விபரங்கள் ஊ பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 38-2, 39 என்பவற்றின் கீழ் நீக்குதல் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது அவை அவசியம் இல்லை என்பதால் இக்கட்டுரை அது குறித்துப் பேசவில்லை.) 
 
யாப்பின் அடிப்படையில் 38 இன் 1 ஆ பிரிவின் கீழ் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். எனவே, பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சந்தர்ப்பம் உருவானால் அடுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து யாப்பின் 40 ஆம் பிரிவு விபரிக்கின்றது. 
 
40-1 (அ) 
ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடையும் முன்பாக வெற்றிடமானால், பாராளுமன்றம் ஜனாதிபதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடையவராகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தல் வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு அவ்வாறு வரும் ஆள் எவரும், பதவியை வெற்றிடமாக்கிச் செல்கின்ற ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும். 
 
ஆ) அத்தகைய தேர்தல் வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் வெற்றிடம் ஏற்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதத்துக்கு பிந்தாமலும் நடாத்தப்படல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக் கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல் இரகசிய வாக்களிப்பு மூலம் அளிக்கபட்ட வாக்குகளின் பூரண பெரும்பான்மை மூலம் நடைபெற வேண்டும். ஆயினும் அத்தகைய வெற்றிடம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டால் ஜனாதிபதியானவர் புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற திகதியிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
 
இ) அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட திகதியில் இருந்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் வரை பிரதமர் ஜனாதிபதி பதவியின் பதிற்கடமை ஆற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர் பதவியில் கடமையாற்றுவதற்கென அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களுள் ஒருவரை நியமிக்கலாம். ஆயினும், அந்த நேரம் பிரதமர் பதவி வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் அல்லது பிரதமர் பதிற்கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருபாரெனின், ஜனாதிபதி பதவியில் சபாநாயகர் பதிற்கடமையாற்ற வேண்டும். 
 
2. ஜனாதிபதி பற்றிய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ( 32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பத்தியின் ஏற்பாடுகள் நீங்கலாக - பதவியேற்கும் ஜனாதிபதியின் பதவியேற்றதன் மேல் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வேறேதேனும் பதவியை வகிக்காதொழிதல் வேண்டும் என்பதுடன், அவர் பாராளுமன்றத்தின் உருப்பினராகவிருப்பின் பாராளுமன்றத்தின் அவரது ஆசனம் வெற்றிடமாகும். ஜனாதிபதி எப்பதவியையேனும் எத்தகையதுமான இலாபந்தரும் பதவியையேனும் வகித்தலாகது.) அவற்றை ஏற்புடையதாக்கக் கூடிய அளவுக்கு பதில் ஜனாதிபதிக்கும் ஏற்புடையனவாதல் வேண்டும். 
 
3. ஜனாதிபதியைப் பாராளுமன்றம் தேர்ந்தெடுத்தலுக்கான நடவடிக்கை முறை பற்றிய எல்லாக் கருமங்களுக்கும், அவற்றுக்கு அவசியமான அல்லது அவற்றின் இடைநேர் விளைவான ஏனைய எல்லாக் கருமங்களுக்கும் சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் ஏற்பாடு செய்யதல் வேண்டும். 
 
மேற்படி யாப்பில் இருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களை சுருக்கமாக விளங்கலாம்.
 
(1) 38 இன் 1 ஆ பிரிவின் கீழ் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். எனவே, பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 
 
(2) 40 - 1 இ பிரிவின் அடிப்படையில் பிரதமரான ரனில் விக்ரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். 
 
(3) 40 - 2 இன் அடிப்படையில் ஜனாதிபதியானமை காரணமாக ரணில் விக்ரமசிங்ஹவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாக மாட்டாது. அதாவது 32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பத்தியின் ஏற்பாடுகளில் இருந்து விடுப்பு அளிக்கப்படுகிறது. 
 
(4) 40 - 1 இ இன் அடிப்படையில் தற்போதைய (அதாவது கோட்டாபய ராஜபக்ஷவின்) அமைச்சரவையில் உள்ள ஏதேனும் ஒரு கபினட் அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அதிகாரம் உள்ளது. 
 
(5) 40 - 1 அ வின் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் 13 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கூடி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தல் வேண்டும். 
 
(6) 40 - 2 இன் அடிப்படையில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடைபெறும் வாக்கெடுப்பு தொடர்பான விடயங்களை பாராளுமன்றமே செயற்படுத்தும். அதன் அடிப்படையிலேயே 20 ஆம் திகதி வாக்கெடுப்பு என்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
(7) 40 - 1 ஆ வின் அடிப்படையில் ஒருவருக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் மட்டுமே இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அன்றைய தினம் வாக்களிக்கும் உறுப்பினர்களில் 50% ஆனோரும் மேலதிகமாக ஒருவரும் வாக்களித்து தெரிவு செய்யும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 
 
(8) 38 இன் 1 ஈ இன் கீழ் அவர் 14 நாட்களுக்குள் 32 ஆம் பிரிவின் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். 
 
(9) அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பர் 17 வரையானதாகும். 
 
யாப்பில் உள்ளதன் சாராம்சமே இது. இவை தவிர ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களும் இந்த தெரிவில் செல்வாக்குச் செலுத்தும். 
 
- Fayas M.A. Fareed.
 
 
Related:
 

ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை.... ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை.... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு?

July 15, 2022

ஜனாதிபதி தெரிவில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சியான SLPP இன் வாக்குகள் முக்கியத்துவமிக்கவை. மொட்டு யாருக்காக புள்ளடி இடுகிறதோ அவரே ஜனாதிபதியாக வேண்டும். 

ஆனால் மொட்டுக்கு விழுந்த அடி பலமானது. எழுந்து நிற்கவே முடியாத நிலையில் உள்ளது. JVP க்கு 3% என்று கிண்டல் செய்த இவர்களின் வாக்கு வீதம் 3% ஆக குறைந்திருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு சொல்கிறதாம். 

ஆனாலும் ஜனாதிபதி தெரிவு செய்யப்படப் போவது எம்பிக்களின் வாக்கின் அடிப்படையில் என்பதால் மொட்டு பலமாகவே உள்ளது. எனினும், ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் மொட்டு தரப்பில் யார் போட்டியிடுவார் என்பதெல்லாம் தெளிவில்லாமல் உள்ளது. அநேகமாக டலஸ் ஆக இருக்கலாம். 

டலஸ் அழகப்பெரும போட்டியிடுவார் என்றும் ஜனாதிபதி பிரதமர் பதவிகள் இரண்டும் டலஸ் மற்றும் சஜித் இனால் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் சில கதைகள் கடந்த ஓரிரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. 

அதனை உறுதிப்பப்டுத்தி டலஸ் தான் போட்டியிடுவதாக இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் மொட்டுக் கட்சியின் வேட்பாளரா அல்லது சுயாதீனமாக போட்டியிடுகிறாரா என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலையே உள்ளது.

யார் இந்த டளஸ்? 
1990 களுக்கு முன்பே மஹிந்தவின் தீவிர விசுவாசி. இடதுசாரி பின்னணி கொண்ட அவரை கட்சியில் வளர்த்து விட்டதே மஹிந்த. சந்திரிக்கா அரசில் அமைச்சுப் பதவி வகித்த போதிலும் வெறுப்புற்று அமெரிக்கா சென்ற அவரை மீண்டும் கொண்டு வந்தார் மஹிந்த ஜனாதிபதி. 

அதன் பின் மஹிந்த சுலங்க என்ற எழுச்சியில் முக்கிய பங்காளியானார். தன்னை எப்போதும் ஒரு இடது சாரியாக காட்டிக் கொள்ளும் அவர் மொட்டின் இனவெறியில் சீரழிந்து போனார். 

கம்மன்பிலவோடு இணைந்து சிறுபான்மையை குறித்து நிற்கும் கீலங்கள் அற்ற தேசிய கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார். கடைசியில் கொள்கையாவது மன்னங்கட்டியாவது என்று அவரும் சீரழிந்து நாட்டையும் சீரழிக்க காரணமாகிப் போனார். 

போன இடத்திலும் அவருக்கு உரிய கெளரவம் கிடைக்கவில்லை. ஏராளமான ராஜபக்க்ஷக்களை கொண்டிருந்த பாராளுமன்றத்தில் சூரிய ஒளியில் மறையும் நட்சத்திரம் போலானார் டளஸ். 

நாட்டு நிலைமை மோசமடைய பலம் பொருந்தியதாக கருதப்பட்ட மொட்டின் சுவர்களில் விரிசல் விழ ஆரம்பித்தது. பலமானதாக அவர்கள் கருதிய இனவாதம் என்ற அடித்தளம் பொருளாதார வீழ்ச்சி என்ற பூகம்பம் காரணமாக நிலை குழைய ஆரம்பித்த போது மொட்டுக்குள் உருவான அதிருப்தியாளர் குழுவில் இணைந்து கொண்டார் டலஸ். 

இன்று மொட்டு பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. SLFP ஒரு பக்கம், SLFP க்குள்ளேயே 2 குழுக்கள், சுசில், அனுர பிரியதர்ஷன குழு, விமல் உடன் உள்ள 10 கட்சி கூட்டு, பசில் குழு, மஹிந்த விசுவாசிகள், கோட்டா அபிமானிகள், வலு சமநிலையை பார்த்து இணைந்து கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் என்று பல. 

டளஸ் உடன் போட்டிக்கு சஜித் வரலாம். ஏற்கனவே சஜித் கோட்டா எதிர்ப்பு முகாமில் உள்ள பல தரப்பினருடனும் கலந்துரையாடி வருகிறார். SLFP போட்டியிடாது என்ற நிலையில் அவர்களின் ஒத்துழைப்பு சஜித்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 

இடையில் பொன்சேக்காவுக்கும் யாரோ ஆசை காட்டி விட்டார்கள். அந்தாளும் வரலாம். அதே நேரம் அநேகமாக ரணிலும் போட்டியிடலாம். ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட ரணில் என்ன செய்வார்? அநேகமாக மொட்டின் நிறைய பேரின் ஆதரவு ரணிலுக்கு கிடைக்கலாம். ஏனென்றால் இப்போதைய நிலையில் வலுவானவராக அவரைக் காணலாம் பல மொட்டினர். 

அத்தோடு டலஸ் உடன் சம அந்தஸ்தில் அல்லது அவரை விட கொஞ்சம் மேலே (உதாரணமாக ஆளும் கட்சியின் பிரதான கொறடா, சபை முதல்வர் போன்ற பொறுப்புக்களில்) இருந்தோர் எல்லாம் டலஸ் ஐ ஜனாதிபதி கதிரையில் அழகு பார்க்க மனதளவில் விரும்பமாட்டார்கள். 

அதே போன்று ஆட்சிக்கு சிக்கல் வரும் போது டளஸ் நழுவிக் கொண்டார். பசில் தரப்போடு முரண்பாட்டார். கோட்டவை பதவி விலகுமாறு பகிரங்கமாக சொன்னார் போன்ற காரணங்களால் மொட்டுவில் உள்ள குழுக்களுள் பலவற்றின் ஆதரவு டலஸ்க்கு கிடைக்காமல் போகலாம். 

மொட்டு தரப்பின் ரிமோர்ட் ராஜபக்க்ஷக்கள் வசமே இருந்தது. இப்போது அதில் பெட்டரி இறங்கி விட்டது. எனவே இயக்க யாரும் இல்லை. அதுவா என்ன செய்யும் என்பதை ஊகிக்க முடியாது. 

சஜித் தரப்பின் நிலையும் நம்பகமானதாக இல்லை. அவர் கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருந்த 54 ல் கொஞ்சம் 20க்கு கை தூக்க வெளியே சென்று விட்டது. அதில் ஹாபிஸ் நசீர் இன்னும் அங்கேயே உள்ளார். மற்றவர்கள் சுயதீனமாக இயங்குகின்றனர். அதே போன்று மனுஷ, ஹரின் ரனிலோடு உள்ளனர். எனவே அவரின் பலமும் 45 க்குள். அதில் பொன்சேக்கா கேட்பாரா என்பதை வைத்து கட்சியில் இன்னும் பிளவு வரலாம். அத்தோடு ஹரின், மனுஷ உதவியுடன் ரணில் மேலும் சில SJB உறுப்பினர்களின் ஆதரவை தன்பக்கம் திருப்பலாம். 

மைத்ரி தரப்பில் 14 பேர் உள்ளனர். இவர்களில் சுரேன் ராகவன், நிமல் சிரிபால, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் முடிவை மீறி கோட்டா ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி பெற்றவர்கள். இவர்கள் எப்போதும் நாயின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணி போன்றவர்கள். எனவே, கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் வெற்றி பெரும் சாத்தியம் அதிகம் உள்ள தரப்பிற்கு கை தூக்குவார்கள். 

அடுத்து சிறு கட்சிகள். JVP அநேகமாக யாரையும் ஆதரிக்காமல் விட அல்லது சஜித்க்கு ஆதரவளிக்கவே சாத்தியம் உள்ளது. சஜித்திற்கான வாய்ப்புக்கள் குறையும் நிலையில் இவர்கள் வாக்காளிக்க மாட்டார்கள் என்பதே என்னுடைய எண்ணம். 

விமல் வீரவன்ஷவின் தலைமையில் உள்ள 10 கட்சி கூட்டு அநேகமாக ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டாது. நடைபெறும் பேச்சுவார்த்தகள் எட்டப்பட்டுள்ள முடிவுகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் சஜித்தை ஆதரிக்கலாம். தமிழ் கட்சிகள் அநேகமாக சஜித்தை ஆதரிக்கலாம். ரணில் வேட்பாளராக வந்தால் அங்கேயும் திரும்பலாம். 

அதே போன்று SJB இல் பாராளுமன்றம் வந்தாலும் 43 ஆவது படையணி என்று தனியான பாதையில் செல்லும் சம்பிக்க ரணவக்க கூட போட்டியிடலாம் என்ற ஊகம் உள்ளது. அவரும் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வெற்றி தோல்வியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளே தீர்மானிக்கும். விதிவிலக்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டாலே தவிர. 

பாராளுமன்றம் அநேகமாக 15 க்கும் மேற்பட்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்தே உள்ளது. நடப்பு பாராளுமன்றம் மக்களின் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதே உண்மை. எனவேதான் இத்தனை பிளவுகள். 

இந்த நிலையில் ஒரு கட்சி சார்பாக ஒரு வேட்பாளர் களம் இறங்கினால் அவரின் கட்சியில் இருப்பவர்களே அவருக்கு வாக்காளிப்பார்களா என்ற சந்தேகமே எழுகின்றது. 

பெரும்பாலும் ரணில், டலஸ், சஜித் ஆகிய மூவருக்கும் இடையேயான மும்முனைப் போட்டியாக இது அமையலாம். இவர்களில் இரண்டு பேர் ஆதரவு தேடித் திரிய மற்றவர் அந்த ரெண்டுபேருக்கும் எதிராக உள்ளோரை தன் கூடையில் போட்டு பதவி பெரும் வாய்ப்பே அதிகம் உள்ளது. காலம் பதில் சொல்லும். 

எவர் வந்தாலும் மக்களின் அவலம் விரைவாக தீர்ந்தால் சரி. 
-  Fayas M. A. Fareed.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு? இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு? Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு:

July 17, 2021

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதற்கான ஏற்பாடுகளை 
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியானவுடன் அரசியல் வட்டாரங்களில் பல வகையான கருத்துக்களும் பல எதிர்பார்ப்புகளும் நிலவி வருகின்றன.
விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு: விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு: Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!

June 26, 2021
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவிற்காக தமது ஆசனங்களை விட்டுக்கொடுக்க நான்கு பேர் தயாராக உள்ளதாக கட்சியின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, 
மர்ஜான் பளீல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே இவ்வாறு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனவே எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் போது பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்! பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.

June 23, 2021

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு வருடத்திற்கும் அதிகமான இடைவௌிக்கு பின்னர் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நிரப்பப்பட்டது. 
05 தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, 1977 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். நான்கு தசாப்தங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர். இலங்கை வரலாற்றில் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல்வாதியாவார். 
இவர் தனது கன்னி உரையில், 
 அரசாங்கம் செல்வந்தர்களுக்கு நிவாரணங்களையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார். கொரோனா, எரிபொருள், கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளன. மாற்றுத் திட்டம் இல்லாமல் தரவுகள் குறித்து கதைப்பதில் பலனில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் ஈடுபடுவதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு இருக்கும் ஒரே வழி என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில். செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.  Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு!

June 17, 2021

ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக நகரசபை தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்கள் தமது பதவியை இழந்துள்ளனர். 
அதாவது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றதன் காரணமாக அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 
 இது தொடர்பில் ஐ.தே.க. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதன் காரணமாக, 
குறித்த உள்ளுராட்சி மன்ற ஆசனத்தை விட்டு அவர்களே விலகுவதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதற்கமைய, நாவலபிட்டி நகர சபைத் தலைவர் சசங்க சம்பத் சஞ்சீவ, வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம,தங்காலை நகர சபைத் தலைவர் ரவிந்து தில்ஷன் வேதஆரச்சி ஆகிய நகர சபைத் தலைவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. 
இது மாத்திரமன்றி கொழும்பு, கடுவலை, ஜா-எல மாநகர சபை உறுப்பினர்கள் மூவர் தங்களது ஆசனத்தை இழந்துள்ளனர். 
மற்றும் மாவனல்லை, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை, கருவலகஸ்வெவ, கெபித்திகொல்லாவை, எஹலியகொட, கலவானை, கொலன்ன, மஹவ, ஆனமடுவ, ஊவ மடுல்ல, பரணகம, கற்பிட்டி, சிலாபம், தலாவை, திறப்பனை, பலாகல, அம்பலாங்கொடை, அம்பகமுவ, பிபிலை, வரக்காபொல, பாணந்துறை, வலிகாமம் வடக்கு, வவுனியா தெற்கு, நுவரகம்பலாத்த, பண்டாரகம, மில்லனிய, நவகத்தேகம, பிங்கிரிய, குருணாகல், ரிதீகம, வத்தளை, திவுலபிட்டிய, களனி, பெலியத்த, நியகாம, போபெ - போத்தல, கலிகமுவ, ரம்புக்கன பிரதேச சபை உறுப்பினர்களும் தங்களது ஆசனத்தை இழந்துள்ளனர்.
ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு! ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு! Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்!

June 01, 2021

கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு, சுமார் 9 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி நேற்று (31) தீர்மானமொன்றுக்கு வந்தது. 
அதாவது கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமிப்பதென கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 
இதுவரை 224 பேருடன் இயங்கிய பாராளுமன்ம் தற்போது முழுமையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்! பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்

May 22, 2021

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை அந்த கட்சி தெரிவித்துள்ளது. 
அதாவது குறித்த சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதாலேயே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
வாக்கெடுப்பின் போது குறித்த உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்தாலும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
எந்த முடிவை எடுத்தாலும் சகலரும் தலைமைத்துவத்திற்கு 
கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். 
ஆனால் கட்சியின் தலைவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததோடு பிரதமரின் இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்!

May 22, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress - ACMC) கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். 
இது தொடர்பில் அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவிக்கையில், 
அண்மையில் இடம்பெற்ற கட்சி உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இருவரும் ஆதரவாக வாக்களித்ததனால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். 
தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்...

May 09, 2021

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார். 
இதற்காக 40 புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்திருப்பதாகவும் அதில் 18 அரசியல் கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்... மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

ரிஷாட் பதியுதீனின் கட்சி தலைமைப் பதவியில் வேறொருவர்...

May 09, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி N.M.சஹீட் என்பவரை கட்சியின் அரசியல் குழு நியமித்துள்ளது. 
இதேவேளை கட்சி தலைவரின் அதிகாரங்களும் பதில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ACMC தெரிவித்துள்ளது.
ரிஷாட் பதியுதீனின் கட்சி தலைமைப் பதவியில் வேறொருவர்... ரிஷாட் பதியுதீனின் கட்சி தலைமைப் பதவியில் வேறொருவர்... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்...

April 26, 2021

தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க தீர்மானித்திருந்த போதும் தற்போது அது 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்

April 25, 2021

நேற்று (24) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார். 
இதேவேளை கைது செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் ஃபேஸ்புக் காணொளியில் கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், 
சபாநாயகரின் முன் அனுமதியோ கைது செய்வதற்கான உத்தரவோ (Warrent) ஒன்றும் இல்லாமல் திடீரென இவர்கள் இந்த அதிகாலை வேளையில் வந்து இருப்பதாக தெரிவித்திருந்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
இந்த நாட்டின் ஜனநாயக கட்சி ஒன்றின் தலைவர். 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட கட்சி. ஒரு சமூகத்தின் அல்லது சமூக கட்சியின் தலைவர். எந்த ஒரு குற்றமும் செய்யாத என்னை இந்த நடுச் சாமத்தில் வந்து கூட்டிக்கொண்டு போவது அரசியல் பழிவாங்கலாகவே கருதுகிறேன். சமூகத்துக்கு செய்த அடக்குமுறையாக, சமூக குரலை நசுக்குவதற்காக சமூகம் பேசக்கூடாது என்பதற்காக செய்த பெரிய சதியாக இதைப் பார்க்கிறேன். 
இது ரமலான் மாதம். எங்கள் எல்லோரையும் படைத்த அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவன்தான் எல்லோரையும் ஆட்சி செய்பவன். 
இந்த மக்களிடம் நான் வேண்டிக்கொள்வது... 
நீங்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் கையேந்துங்கள். 200 மையத்துகளை எரித்து எப்படி சந்தோசம் கொண்டாடினார்களோ அதேபோன்றுதான் இன்று என்னையும் கைது செய்கிறார்கள். எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. என்னென்ன பொய்களை சொல்லி கொண்டுபோய் என்னை தண்டிப்பதற்கான சதிகளை செய்கிறார்களோ தெரியவில்லை. 
சமூகத்துக்காக பேசிய ஒரே காரணத்திற்காக ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவரை இந்த நடுச்சாமம் மூன்று மணிக்கு தூங்கி கொண்டு இருக்கும் போது... நான் நோன்பாளி என்ற வகையில் நோன்பைத் திறந்து தராவீஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது நடுச்சாமத்தில் வந்து கூட்டிக்கொண்டு போகிறார்கள். 
எனது மனைவி கேட்டார்... ஏன் காலையில் வந்து கூட்டிச் செல்லலாம் தானே என்று... இல்லை அவசரமாக கூட்டி செல்ல வேண்டும் என்றனர். சரி சபாநாயகரின் அனுமதியாவது இருக்கிறதா? என்று கேட்டார். அதுவும் இல்லை. 
இது பொலிஸின்... இந்த அரசாங்கத்தின் அராஜகம். 100 குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. இந்த நடுச்சாமம் வீட்டை உடைத்து கொண்டு 
வந்தது போல் தான் வந்திருக்கிறார்கள்.
ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் கட்சித் தொண்டர்களிடமும் நான் வேண்டிக் கொள்வது இன்று எனக்கு செய்த இந்த அநியாயத்திற்கு எதிராக நீங்கள் தட்டிக் கேளுங்கள். இந்த அநியாயத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து.. இது போன்று இன்னொரு அரசியல் தலைவரை அநியாயமாக கைது செய்யாமல் இருக்க வேண்டும். 
படைத்த அல்லாஹ்விடத்திலேயே ஒப்படைக்கிறேன். ஆதரவாளர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். இது ரமலான் மாதம். அல்லாஹ் விரும்பும் மாதம். குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். அமல் செய்து அதிகமதிகமாய் கையேந்துங்கள். இந்த அநியாயக்காரர்களுக்கு நேர்வழி இருக்குமென்றால் அல்லாஹ் நேர்வழியை கொடு! இல்லையென்றால் யா அல்லாஹ் இவர்களை அழித்துவிடு!! என்று நீங்கள் கையேந்துங்கள். 
இன்னும் யார் யாருக்கு என்ன அநியாயங்களை செய்யப்போகிறார்களோ தெரியாது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த பாவமும் செய்யவில்லை. என்னுடைய கை சுத்தமானது. எனவே அநியாயமாக அபாண்டமாக ஏதோ ஒன்றை சுமத்திக் கொண்டு என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன் தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்...  படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்  Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்....

April 17, 2021

சர்வாதிகாரி போல செயற்படுவாரென எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். அவர் ஹிட்லர் போல செயற்பட்டால் 
யாரும் குறைகூறமாட்டார்கள். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் தெரிவித்திருந்தார். 
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில் கருத்தொன்றை பதிவிட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட், 
"ஹிட்லர் ஒருவர் இருந்தால் அது இலங்கைக்கு நன்மைபயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்தேன். இவ்வாறான கருத்தை தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் காரணமானவர் ஹிட்லர். எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் நிச்சயமாக முன்மாதிரியில்லை" என அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்.... தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்.... Reviewed by irumbuthirai on April 17, 2021 Rating: 5
Powered by Blogger.