கொட்டகலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகம்....


மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக இன்று ஹட்டனுக்கு (09.03.2020) அமைச்சர் பந்துல குணவர்தன விஜயம் செய்துள்ளார். சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சருடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியும் மலையக மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக மேலும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அடுத்த ஆண்டு முதல் பட்டம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை தொடரக்கூடிய வகையில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைவாக இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை பார்வையிடுவதற்காகவே இன்று நான் இங்கு விஜயம் செய்தேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமும் பல்கலைக்கழக கல்லூரியாக தரமுயர்த்தப்படும். அதேபோல் கொட்டகலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமொன்றும் அமைக்கப்படும். அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 
பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பயின்று பெருந்தோட்டத்துறை மாணவர்கள் முன்னேறுவதற்கு வழிவகை செய்யப்படும். சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்களுக்கு கிடைக்கும் சிறப்பானதொரு வரப்பிரசாதம் இதுவாகும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். 
(அ.த.தி)

கொட்டகலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகம்.... கொட்டகலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகம்.... Reviewed by irumbuthirai on March 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.