பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்!


நேற்றைய தினம்(20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்தினார். 

தற்போதைய நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தவர்களாக கடமையாற்றுபவர்கள் மற்றும் ஏனைய துறைகளில் கடமையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்காக போட்டிப் பரீட்சை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் வாரம் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போக்குவரத்து சபையில் ஒரு பஸ்ஸுக்கு 8 சாரதிகள் உள்ளனர். பெற்றோலிய கூட்டத்தாபனத்திலும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். ஆனால் உயர்கல்வி வழங்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் 18 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருக்க வேண்டிய நிலையில் 46 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் உள்ளார்.

200 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை. மேலும் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்ற 180 விரிவுரையாளர்கள் தமது பட்டப்பின்படிப்பை இடைநிறுத்தி உள்ளனர். 

அண்மையில் அபிவிருத்தி உத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளில் முதலாம் இரண்டாம் வகுப்பை பெற்ற பட்டதாரிகளும் பிரதேச செயலகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களின் பணிகளை செய்கின்றனர். இன்னும் சிலர் பட்டதாரி அல்லாதவர்களின் பணிகளை செய்கின்றனர். அவர்களுக்கு கதிரை மேசைகள் கூட சில இடங்களில் வழங்கப்படவில்லை. அவர்களின் கல்வித் தகுதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காக போட்டி பரீட்சை நடத்தி ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் முதலாம் வகுப்பை பெற்ற பட்டதாரிகளை தத்தமது பல்கலைக்கழக பீடங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை 2010 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2457 விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்! பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on October 21, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.