10 நாட்களைக் கண்ட காலிமுகத்திடல்.... 10 நாட்களும் நடந்தவை என்ன? ஒரே பார்வையில்...


எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் தாமாக ஒன்று சேர்ந்த மக்கள் குழுவினர் கடந்த 9ஆம் திகதி முதல் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர். 
 
அந்தப் போராட்டக் களம் இன்றுடன் 10வது நாளை பார்க்கிறது. 
 
எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, கட்டுப்பாடில்லாமல் பொருட்கள் சேவைகளின் விலை அடிக்கடி அதிகரிக்கின்றமை, பால்மா தட்டுப்பாடு, பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தும் தமக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை, இந்த நெருக்கடியான நிலைமைகளுக்கு அரசாங்கத்தினால் முறையான திட்டம் முன்வைக்கப்படாமை அல்லது நடைமுறைப்படுத்தபடாமை போன்ற பல்வேறு காரணங்களினால் பொறுமை இழந்த மக்கள் ஆங்காங்கே தமது பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 
 
இதன் தொடராக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இதற்கான அழைப்பு சமூக வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
ஓரிரு நாட்களில் இந்த ஆர்ப்பாட்டம் கலைந்து சென்று விடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பத்தாவது நாளையும் பார்த்துள்ளது. 
 
இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துகின்றமை விசேட அம்சமாகும். 
 
நாட்டிலுள்ள சகல இன மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்தமை இந்த ஆர்ப்பாட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது. 
 
ஆரம்பம் முதல் இன்று வரை இந்தப் போராட்டக் களத்தில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை இங்கே தொகுத்து தருகிறோம். 
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திற்கு கோட்டா கோகம (GOTAGOGAMA) என பெயரிட்டனர். 
 
இங்குள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய வசதிகள் என்பவற்றை ஏனையவர்கள் கொண்டுவந்து வழங்கினர். பின்னர் தங்குவதற்கு கூடாரங்களும் அமைக்கப்பட்டன. 
 
நாட்கள் செல்ல செல்ல இந்த போராட்டத்திற்கான ஆதரவுகள் பெருகின. பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் அந்த இடத்திற்கு வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். 
 
இதுவரை அந்த இடத்தில் வாசிகசாலை, வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை, இலவச சட்ட உதவி மையம், செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி மையம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி மையம், தற்காலிக மலசலகூட தொகுதி, இலவச WIFI வசதி, கையடக்க தொலைபேசிகளை சார்ஜ் (Charge) செய்வதற்கான இடம் போன்ற பல்வேறு விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இங்குள்ள புத்தகசாலை சுமார் 4, 5 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் இப்பொழுது பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேர்ந்துள்ளன. 
 
பலர் தமது பிள்ளைகள், சிறு குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 
 
பிள்ளைகள் சித்திரம் வரைவதற்கு என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரும் வழிகாட்டாமலேயே அவர்கள் சுயமாக வரையும் சித்திரங்களில் பெரும்பாலானவை இந்தப் போராட்டங்களை சித்தரிப்பதாகவும் அரசாங்கத்திற்கு எதிரான விடையங்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்படுகின்றன. 
 
ஒவ்வொருவரும் தம்மால் எது முடியுமோ அதை அங்கே வந்து போராட்டக்காரர்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர். 
 
கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களிலும் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சென்ற மக்கள் அந்த போராட்டக்காரர்களோடு தமது புத்தாண்டை கொண்டாடினர். 
 
அன்றைய தினம் பெரும்பாலும் தமது உறவினர்களின் வீடுகளுக்கு செல்லாமல் போராட்டக் களத்திற்கு சென்று அங்குள்ள மக்களோடு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தாம் தயாரித்த பலகாரம் சிற்றுண்டிகள் என்பவற்றை அந்த மக்களோடு பகிர்ந்து கொண்டனர். 
 
காலிமுகத்திடல் GOTAGOGAMA வில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சமமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அதற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. 
 
இது மாத்திரமன்றி GOTAGOGAMA வின் கிளைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன. காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
நேற்றைய தினம் காலியில் கிளை ஆரம்பிக்கப்பட்ட பொழுது அங்கு வந்த போலீசார் அதை அகற்றிய போது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 
 
இது மாத்திரமன்றி ஆதிவாசிகள் குழு ஒன்றும் காலிமுகத்திடலுக்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
போராட்டக் களத்திற்கு சீருடையில் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமையினால் கைது செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவரை பிணையில் எடுப்பதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இலவசமாக முன்வந்தது. நீதிமன்றமும் அவருக்கு பிணை வழங்கியது. 
 
இதேவேளை முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணிநேர சத்தியாக்கிரக போராட்டத்தையும் அங்கு நடத்தினார். ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பலியானோருக்கு நீதி வேண்டியும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர் அந்த சத்தியாகிரகத்தை நடத்தினார். 
 
அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவ்வப்போது கலைஞர்களால் பாடல்களும் பாடப்படுகின்றன. வீதிநாடகம், சொற்பொழிவு என்பனவும் இடம்பெறுகின்றன. 
 
நேற்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு தினமாகும். 2019 இல் இதுபோன்ற ஒரு தினத்தில்தான் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு நீதிகோரி விஷேட நிகழ்வுகளும் நடந்தன. 
 
அங்கவீனமுற்ற படைவீரர்கள், விசேட தேவையுடையோர் என பல தரப்பினரும் அங்கு சென்று ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்றைய தினம் புதிய அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். பிரச்சினைகளுக்கு இது தீர்வல்ல எனக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 
 
இதேவேளை நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றுள்ளனர். 
 
எதிர்க்கட்சி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்ப்பிக்க மும்முரமாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. 
 
இவ்வாறான நிலையில் இலங்கையின் நெருக்கடியான நிலை அடுத்து எந்தக் கட்டத்தை நோக்கி நகரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- irumbuthirai news.
 
10 நாட்களைக் கண்ட காலிமுகத்திடல்.... 10 நாட்களும் நடந்தவை என்ன? ஒரே பார்வையில்... 10 நாட்களைக் கண்ட காலிமுகத்திடல்.... 10 நாட்களும் நடந்தவை என்ன? ஒரே பார்வையில்... Reviewed by Irumbu Thirai News on April 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.