அரசியல் களத்தில் திரைக்குப் பின்னால்..



சுமார் 6 மாதங்களுக்கு மேற்பட்ட இடைவெளியின் பின்னர் கடந்த வாரம் இலங்கையில் பாராளுமன்றம் கூடியது. இலங்கையில் முதலில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்றது 1947 ஆம் ஆண்டாகும். அன்றிலிருந்து 2020 மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றம் வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் இம்முறை 9 ஆம் பாராளுமன்ற அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
படு தோல்விக்கு இடையே தமக்கு கிடைத்த தேசியப்பட்டியலுக்கு ஒருவரை நியமித்துக் கொள்ளக்கூட வெளியற்ற நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 
 கடந்த புதன் கிழமை புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். அமைச்சர்கள் அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய பத்திரமாக அது இருந்தது. அடுத்து மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி முன்வைத்தார். 
அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி சமர்ப்பித்தார். பிரதமர் நிதியமைச்சராக இடைக்கால நிதி அறிக்கைக்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். கொரோணா காரணமாக தேர்தல் தள்ளிப் போனமையால் சமர்ப்பிக்கப்பட முடியாமல் போன வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக செப்டம்பர் 1 தொடக்கம் டிசம்பர் 31 வரையான செலவுகளுக்காக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளமையால் உடனடியாக அரசு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளது. 
அடுத்து நீதி அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்தை கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பை பூரணமாக மாற்றுவதற்குமான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். 
அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கன்னிக் கூட்டம் புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் ஒன்றுகூடல் அரங்கில் எல்லா உறுப்பினர்களும் அமர இடம் போதாமல் போனது. எனவே பலர் மேல் மாடியில் அமர வேண்டி ஏற்பட்டது. இதில் தேர்தல் வெற்றி தொடர்பில் சகலருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் பதவிகளுக்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டார். 
கடந்த ஆட்சியின் போது 

பாராளுமன்ற கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கு பற்றாமை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமையை சுட்டிக்காட்டி உரையாற்றிய பிரதமர் தமது ஆட்சியில் அது நடைபெறக் கூடாது என்றும் சகலரும் பாராளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். 
20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய வேளையில் சுமார் 30 ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர். ஆளும் கட்சி பக்கம் 120 ஆசனங்களே உள்ளன. எனவே இவர்கள் எதிர்த்தரப்பில் அமர வேண்டி ஏற்பட்டது. ஆரம்ப கூட்டத்தின் போது விரும்பிய ஆசனங்களில் அமரலாம் என்ற நிலை இருந்தது இதுவரை ஆசனங்கள் ஒதுக்கப்படாமையினாலாகும். 
உதய கம்மன்பில, விமல் வீரவங்ஷ, நாமல் ராஜபக்ஷ போன்ற ஆளும் தரப்பின் முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். 
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சுகாதார அமைச்சராக இருந்த போது அமர்ந்த அதே ஆசனத்தில் அமர்ந்திருந்தார். 
தந்தை மகன் சோடிகள் 4 இம்முறை பாராளுமன்றத்தில் உள்ளன. அவர்களில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது மகன் சசிந்திர ராஜபக்ஷவுடன் சபைக்குள் பிரவேசித்தார். ஜனக பண்டார தென்னக்கோன் தன் மகன் பிரமித பண்டார தென்னக்கோன் உடன் வந்ததுடன் ஜனக ஆசனத்தில் அமர்ந்த பின்னர் பிரமித அவருக்கு வெற்றிலை வழங்கி காலில் விழுந்து வணங்கியமை நெகிழ்ச்சியாக நோக்கப்பட்டது. 
 அதன் பின்னர் சபாநாயகர் தேர்வு, பின்னர் பிரதி சபாநாயகர், குழுக்களில் பிரதித் தலைவர் தேர்வுகள் இடம் பெற்றன. இந்த பதவிகளுக்கு எதிர்க்கட்சி சார்பில் எந்த பெயர்களும் பிரேரிக்கப்படாமல் போட்டியின்றி ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 
 பின்னர் சிறிது நேரம் பாராளுமன்ற கூட்டம் நடை பெற்றது. சுமார் 15 கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரை வாழ்த்தி உரையாற்றினர். 
 வாசுதேவ நாணயக்கார, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரை விட மாத்திரமே புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன பாராளுமன்ற அனுபவம் குறைந்தவர். 1983ல் ஹக்மன தேர்தல் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஐதேக சார்பாக போட்டியிட்டு வென்ற அவர் 1987ல் இந்து லங்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்தார். அமைச்சராக, தென் மாகாண முதலமைச்சராக என பதவிகளை வகித்த கெளரவமான அரசியல்வாதி அவர். 
அதன் பின்னர் பி.ப 3.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பி.ப 3.00 மணிக்கு ஜனாதிபதி அவர்களால் புதிய பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கென வருகை தந்த ஜனாதிபதி வழமைக்கு மாற்றமாக எந்த வாகன அணிவகுப்பும் இன்றி ஒரே வாகனத்தில் வந்தமை பலரது அவதானத்தையும் ஈர்த்தது. ஜனாதிபதியை வரவேற்கும் உற்சவமும் மிக எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஜனாதிபதி தமது அரசின் கொள்கை உரையை நிகழ்த்தினார். 
நாட்டிற்கு பொருத்தமான புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது தமது அரசின் முதன்மையான கடமை என்பதை அவர் அதில் தெரிவித்திருந்தார். அந்த யாப்பு ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சுக்கள், அரச நிறுவனங்களை அனாவசியமான ஊழியர்களால் நிரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகள் அடையத் தவறும் பட்சத்தில் மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் போது உத்தேச அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆராய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குழு ஒன்றை நியமித்தது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஸ்ரீலசுக இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். 
ஐதேக தலைமையகத்தில் நுழைந்த பிக்குகள் சிலர் தலைமையை கரு ஜயசூரியவுக்கு வழங்கி ஒதுங்குமாறும், எழுத்து மூலம் அதை தம்மிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ரணில் இதை நிராகரித்து கட்சியின் செயர்குழுவே தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் என்றும் புதிய தலைமைக்கு 8 பேர் ஏற்கனவே முன்வந்திருப்பதாகவும், வேண்டுமென்றால் அவர்களுடன் கருவும் போட்டியிடலாம் என்றும் அதுவரை தானே தலைவராக தொடர்வேன் என்றும் குறித்த செயற்பாடு பூரணாமடைய குறைந்த பட்சம் 2 மாதங்களாவது செல்லும் என்றும் தெரிவித்து வெளியேறிச் சென்றார். 
பிறகு அங்கே வந்த சாகல ரத்நாயக்க கடந்த தேர்தலில் கரு ஜயசூரிய ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்ட எரந்த வெலிஅங்கே க்கு சார்பாக வீடியோ வெளியிட்டதாக கூறி அந்த வீடியோவை காட்டினார். அவ்வாறு தேர்தல் சமயத்தில் வேறு கட்சி ஒன்றின் வேட்பாளருக்காக உதவிய கரு கட்சித் தலைவராவது எப்படி என்று அவர்கள் பிக்குகளிடம் வினவினர் 
வெளியே வந்த பிக்குகள் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்தனர். வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அவர்கள் அந்த வீடியோவில் வெலிஅங்கே நல்லவர் என்றே செல்வதாகவும், அவருக்கு வாக்களிக்க சொல்லவில்லை என்றும் அவரை ஓரம் கட்ட தலைமை முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர். அந்த வீடியோ கடந்த அக்டோபர் மாதம் அவரின் வேண்டுகோளின் படி வழங்கப்பட்டதாகவும், அப்போது கட்சி பிரிந்திருக்கவில்லை என்றும் கரு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. அதில் சகல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். உறுப்பினர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு செயலமர்வு நடந்தது. தலைவர் சஜித் இறுதி நேரத்தில் வந்து இணைந்து கொண்டார். உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் முன்வைத்தல்களை மேற்கொண்டனர். கபீர் ஹஷிம், ஹர்ஷ டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் தனித்தனி தலைப்புக்களில் ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்த முன்வைப்புக்களை செய்தனர். ராஜித்தவும் தனது கருத்துக்களை முன்வைத்தார். அவை ஒவ்வொன்றையும் சஜித் குறிப்பெடுத்துக் கொண்டார். பின்னர் சஜித் உரையாற்றினார். தனது தலைமையின் கீழ் வேலை செய்பவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 
அதன் பின்னர் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. "பாராளுமன்றம் கூட்டப்பட்டால் சபாநாயகர் தெரிவு முக்கியம். அது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்" என்று திஸ்ஸ அத்தநாயக தெரிவித்தார். "அரசு யாரை விரும்புகிறதோ அவரை நியமித்துக் கொள்ள அரசுக்கு இடமாளித்து நாம் ஒதுங்கி இருப்போம்" என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். "ஆனாலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டிய சில பதவிகள் உள்ளன. அவற்றை அரசு விரும்பும் முறையில் நியமித்துக் கொள்ள நாம் அனுமதிக்க கூடாது. கோப், கோபா குழுக்களின் பெரும்பான்மை எதிர்க்கட்சிக்கே உள்ளது. அவற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். அதை சஜித் உம் அங்கீகரித்தார். 
கூட்டம் நிறைவடைந்த பின்னர் சஜித் உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் நட்புறவுடன் கலந்துரையாடினார். 
 முதல் பாராளுமன்ற கூட்டத்தின் பின் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. நிமல் லங்ஸா மற்றும் பியல் நிஷாந்த ஆகிய இரு அமைச்சர்களும் சபா மண்டபத்தில் இருந்து வெளியே வந்து கதைத்தவாறு எதிர்க்கட்சி தலைவர் அழுவலகப் பக்கமாக வந்தனர். பழக்க தோஷம் போலும். அவர்கள் நேரடியாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நுழைந்ததுவுடன் புதிய முகங்களை கண்டு சுதாகரித்துக் கொண்டனர். தாம் ஆளும் கட்சி என்ற நினைப்பு அப்போதுதான் வந்தது போலும். "ஐயோ தவறான இடத்திற்கு வந்து விட்டோமே" என்று கூறியவர்களாக நகர்ந்து சென்றனர். 
 தொகுப்பு: 
fபயாஸ் M fபரீட்

அரசியல் களத்தில் திரைக்குப் பின்னால்.. அரசியல் களத்தில் திரைக்குப் பின்னால்.. Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.