பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்!


பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. 

 

மேலும் குறித்த முடிவை மீளப் பெறுமாறும் தொழிற்சங்க கூட்டமைப்பு குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் இரவு பகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியிலும் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றி பணியாற்றி வந்துள்ளனர். 

 

அதுமாத்திரமன்றி கொரோனா காலப்பகுதியிலும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்கும் அரசின் எவ்வித அனுசரணையும் இல்லாத நிலையிலும் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை கருத்தில் கொள்ளாது மாணவர்களையும் அதிபர்கள் ஆசிரியர்களையும் பல்வேறு சிரமங்களுக்குள் தள்ளும் வகையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதைக் கண்டிக்கிறோம். 

 

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள், மின்சாரம் எரிவாயு, அத்தியாவசியப் பொருள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக சாதாரண மக்களுக்கு தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்வதிலுள்ள சிரமத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

 

அதேபோல் தற்போது காணப்படும் உணவுப் பொருள் தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

 

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து நெருக்கடி நிலைமை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் சிக்கல் ஏற்படும். 

 

இவ்வாறான நிலைமையில் 07:30 - 02:30 வரை பாடசாலை நேரத்தை அதிகரிப்பது மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். 

 

வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை செய்கின்றனர். அதே போல் இந்த நிலைமையிலும் செயற்படுவர். 

 

எனவே நேரத்தை அதிகரிக்கும் முடிவை மீளப்பெறுமாறு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்! பாடசாலை நேரத்தை அதிகரித்தல்: கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய 16 தொழிற்சங்கங்கள்! Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.