தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தல்: முழுமையான பார்வை சுருக்கமாக...



(தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பாகவும் அதற்கு விண்ணப்பித்தல் தொடர்பாகவும் பொதுவான ஒரு பார்வை மற்றும் வழிகாட்டல் அது தொடர்பான விபரங்கள் சுருக்கமாகவும் எளிமையாகவும் இங்கு தரப்பட்டுள்ளது. எம்.யூ.எம். ஸபீர் (SLTES, விரிவுரையாளர் - தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி) என்பவரால் தொகுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வந்த ஆக்கத்தையே விண்ணப்பதாரிகளின் நலன் கருதி எமது இந்த தளத்தில் பிரசுரிக்கிறோம். நன்றி: எம்.யூ.எம். ஸபீர்) 


தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கற்பித்தலில் தேசிய டிப்ளோமா எனும் இப்பாடநெறியானது சேவை முன் பயிற்சிப் பாடநெறியாகும். இப்பாடநெறியைப் பூர்த்தி செய்பவர்கள் அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெறுவர். 


பாடநெறிக் காலம்  
இப்பாடநெறி மூன்று ஆண்டுகளாகும். தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வதிவிடக் கற்கை. அதன் பின் பாடசாலையொன்றுக்கு இணைப்புச் செய்யப்பட்டு அங்கு ஒரு வருட காலம் கட்டுறுப் பயில்வு 


நிபந்தனைகள் 
  • 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் பிரதான மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். (Z புள்ளி – மைனஸ் ஆக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.) 
  • க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களில் திறமைச் சித்தி இருக்க வேண்டும். 
  • 2025.01.01 அன்று 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். (சமய பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் மதகுருமார் ஆயின் 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்) 
  •  விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும். 



விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறை (Online System) மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். லிங்க்: https://ncoe.moe.gov.lk/NCOE ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 28 ஆகும். 


ஆட்சேர்ப்பு முறை 
மொத்த வெற்றிடங்களில் 50% தேசிய அடிப்படையிலும் மீதமுள்ள 50% மாவட்ட அடிப்படையிலுமாக ஆட்சேர்ப்பு இடம்பெறும். விண்ணப்பதாரிகள் பெற்றுள்ள Z புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கான வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும். 


தெரிவு செய்யப்படும் முறை 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதன் போது நடைமுறைத் தேர்வு இடம்பெறும். அதில் தகைமைகள் பரீட்சிக்கப்படும். அத்தோடு குறித்த விண்ணப்பதாரி ஆசிரியர் தொழிலுக்குள் நுழையத் தேவையான உடல் மற்றும் மன ஆற்றல்களைக் கொண்டுள்ளாரா என்பது குறித்தும் பரிசோதிக்கப்படும். அதில் சித்தியடைபவர்கள் இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதன் போது அவர்களது உடல் மற்றும் மன ஆற்றல்கள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் இரண்டாவது தடவை பரீட்சிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். 

இரண்டு நேர்முகப் பரீட்சைகளிலும் சித்தியடையும் விண்ணப்பதாரர்கள் கல்வியியற் கல்லூரியில் பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும் பதிவு செய்வதற்கு முன்பாக அவர்கள் தமது உடல், உள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக வைத்திய பரிசோதனைக்கு உட்பட வேண்டும். 


பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்  

உதாரணம் – 01 
ஆரம்பப் பிரிவு பாடநெறிக்கு விண்ணப்பிப்பதாயின், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழியில் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி பாடம் எடுக்காதவர்களாயின், க.பொ.த. சாதாரண தரத்தில் தமிழில் அதிதிறமைச் சித்தியும் கணிதத்தில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும். 

ஆரம்பக் கல்வி பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர். 

தர்காநகர் தே.க.க. 

அட்டாளைச்சேனை தே.க.க. 

மட்டக்களப்பு தே.க.க. 

யாழ்ப்பாணம் தே.க.க. 

ஆரம்பப் பிரிவு பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 96 பேரும் மாவட்ட மட்டங்களில் 96 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 


உதாரணம் – 02 
தமிழ் மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதாயின், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி பாடத்தில் திறமைச் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ்மொழியில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். 

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர். 

தர்காநகர் தே.க.க. 

ஶ்ரீபாத தே.க.க. 

மட்டக்களப்பு தே.க.க. 

பேராதெனிய தே.க.க. 

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 23 பேரும் மாவட்ட மட்டங்களில் 22 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 


உதாரணம் – 03 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்திற்கு இம்முறை ஆங்கில மொழி மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதாயின், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் த.தொ.தொ. பாடத்தில் திறமைச் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் த.தொ.தொ. பாடத்தில் சாதாரண சித்தியும் க.பொ.த. சாதாரண தரத்தில் த.தொ.தொ. பாடத்தில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும். 

தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர். 

தர்காநகர் தே.க.க. 

றுவன்புர தே.க.க. 

யாழ்ப்பாணம் தே.க.க. 

பஸ்துன்ரட தே.க.க. 

மஹரகம தே.க.க. 

தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 65 பேரும் மாவட்ட மட்டங்களில் 65 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 


மேலதிக தகவல்கள் சில: 
தமிழ் மொழிமூல பாடங்கள் இடம்பெறும் கல்லூரிகள்

தர்காநகர் தே.க.கல்லூரி 

மட்டக்களப்பு தே.க.கல்லூரி 

ஶ்ரீபாத தே.க.கல்லூரி 

பேராதெனிய தே.க.கல்லூரி 

யாழ்ப்பாணம் தே.க.கல்லூரி 

அட்டாளைச்சேனை தே.க.கல்லூரி 

மகாவலி தே.க.கல்லூரி 

வவுனியா தே.க.கல்லூரி 


தர்காநகர் தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள் 

ஆரம்பக் கல்வி 
சமூக விஞ்ஞானம் 
தமிழ்மொழியும் இலக்கியமும் 
உணவு நுகர்வுத் தொழினுட்பவியல் 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் (ஆங்கில மொழிமூலம்) 

அட்டாளைச்சேனை தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள் 
ஆரம்பக் கல்வி 
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்) 
கணிதம் (ஆங்கில மொழிமூலம்) 
இஸ்லாம் 
விசேட தேவைக் கல்வி 
முயற்சியாண்மையும் நிதியியல் அறிவும் 


மட்டக்களப்பு தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள் 
ஆரம்பக் கல்வி 
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்) 
கணிதம் 
சமூக விஞ்ஞானம் 
தமிழ்மொழியும் இலக்கியமும் 
சித்திரம் 
நாடகமும் அரங்கியலும் 
உடற்கல்வி 
வடிவமைப்புக் கலைகள் 
உற்பத்தித் தொழினுட்பவியல் 
வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்பவியலும் 


யாழ்ப்பாணம் தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள் 
ஆரம்பக் கல்வி 
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்) 
நடனம் (பரதம்) 
சங்கீதம் (கர்நாடகம்) 
உடற்கல்வி 
விசேட தேவைக் கல்வி 
மாணவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் 


வவுனியா தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள் 
விஞ்ஞானம் (சிங்கள மொழிமூலம்) 
கணிதம் (சிங்கள மொழிமூலம்) 
இந்து சமயம் 
கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயம் 
உடற்கல்வி (சிங்கள மொழிமூலம்) 
உணவு நுகர்வுத் தொழினுட்பவியல் (சிங்கள மொழிமூலம்) 
விவசாயத் தொழினுட்பவியல் (சிங்கள மொழிமூலம்) 
இரண்டாம் மொழி தமிழ் 


ஶ்ரீபாத தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள் 
ஆரம்பக் கல்வி (சிங்களம்) 
விஞ்ஞானம் 
கணிதம் (ஆங்கில மொழிமூலம்) 
சமூக விஞ்ஞானம் (சிங்கள மொழிமூலம்) 
தமிழ்மொழியும் இலக்கியமும் 
சித்திரம் 
நடனம் (பரதம்) 
சங்கீதம் (கர்நாடகம்) 


குறிப்புகள்
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி பெண் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமானது. 

ஶ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் 75% இந்திய வம்சாவளி தமிழ் விண்ணப்பதாரர்களும் 25% சிங்கள இன விண்ணப்பதாரர்களும் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர். 


தொகுப்பு:
எம்.யூ.எம். ஸபீர் (SLTES) 
விரிவுரையாளர், 
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி 


மேலதிக தகவல்களுக்கு (07.11.2025) வெளியான வர்த்தமானப் பத்திரிகையைப் பார்வையிடவும்.



தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தல்: முழுமையான பார்வை சுருக்கமாக... தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தல்: முழுமையான பார்வை சுருக்கமாக... Reviewed by Irumbu Thirai News on November 10, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.