அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு:


கடந்த சில வாரங்களாக இலங்கை அரசியல் களத்தில் Top Ten List இல் முதலில் இருந்த கொரோனா விவாகாரம் இவ்வாரம் கொஞ்சம் சறுக்கியிருந்தது. 
கடந்த தொடரின் இறுதியில் நாம் குறிப்பிட்டிருந்தது போல வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் கொரோனா விவகாரத்தை தள்ளி முக்கிய செய்திகளாக இடம் பிடித்தன. 

 #முப்பெரும் விழா கொண்டாடிய அரசு
கடந்த வாரம் அரசுக்கு மிக முக்கியமான வாரமாக அமைந்தது. மூன்று முக்கிய நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து ஒரு வருடம் பூர்த்தியாதல், SLPP அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75 ஆவது பிறந்த தினம் என்பனவே அம்மூன்று விடயங்களுமாகும். 

#அனுராதபுரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் மத நிகழ்வுகள் மாத்திரம் நடைபெற்றன. இதற்கென ஜனாதிபதி, பிரதமர் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை அனுராதபுரத்தில் தங்கினர். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும், பிரதமர் மஹிந்த வணிகரான முதித குணசேகரவின் வீட்டிலும் தங்கினர். 
பிரதமர் மஹிந்தவை சந்திக்க மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தந்ததுடன், ஜனாதிபதியை சந்திக்க யாருமே செல்லவில்லை. 
அடுத்த நாள் இவர்கள் இருவரும் தனித்தனியாக மத சடங்குகளில் ஈடுபட்டனர். மஹிந்த முதலில் புனித வெள்ளரசு மரத்தை தரிசிக்க சென்றார். அவருடன் மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதிகளான SM சந்திரசேன, துமிந்த, ஷெஹான், ஆகிய அமைச்சர்களோடு, முன்னாள் வடமேல் மாகாண முதல்வர் SM ரஞ்சித் உம் இணைந்து கொண்டனர். 
 அதனைத் தொடர்ந்து அங்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பாரியாருடன் மாத்திரம் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் அனுராதபுரத்தில் உள்ள 8 தலங்களுக்கும் ( அட்டமஸ்தான) இவர்கள் வெவ்வேறாகவே சென்ற போதிலும் மிரிசவெடிய விகாரையில் நடைபெற்ற பூஜையில் இணைந்து கலந்து கொண்டனர். 

 #இவ்வார அமைச்சரவைக் கூட்டம்
இவ்வார அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 9 மணி வரை நீண்டு சென்றது. அதிகமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை இவ்வார கூட்டம் மிக நீண்டு செல்ல காரணமாக அமைந்தது. 

** மீண்டும் சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்** 
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கோவிட் 19 காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல் பரவி பாரிய சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. 
இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவசங்ச இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி முக நூலில் இட்டிருந்த பதிவு ஒன்றே காரணமாக அமைந்ததாக குற்றம் சாட்டினார். 
அதனை மறுத்த அலி சப்ரி தான் அவ்வாறு எந்த பதிவையும் இடவில்லை என்றும், முடிந்தால் தான் இட்ட அவ்வாறான பதிவு ஒன்றைக் காட்டுமாறும் அமைச்சர் விமல்க்கு சவால் விடுத்தார். 

 **டக்ளஸ், விமல் இன் ஆயுதங்களுக்கு ஏற்பட்ட சோதனை
ஆயுதங்கள் தொடர்பான ஒரு தொல்பொருள் காட்சிச்சாலையை உருவாக்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை பிரதமர் சமர்ப்பித்திருந்தார். 
இலங்கையின் பாரம்பரிய ஆயுதங்கள், சம்பிரதாயப்பூர்வமாக பரம்பரை பரம்பரையாக வீடுகளில் உள்ள ஆயுதங்களை திரட்டி இதனை பிரதமர் முன் மொழிந்தார். இதன் மூலம் இவற்றை எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார். அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச "அப்படியென்றால் அதில் டக்ளஸ் தேவானந்தா பயன்படுத்திய ஆயுதங்களையும் வைக்கலாம்" எனக் கூற குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே "ஏன் டக்லஸ் இனுடையது மட்டுமே. விமல் பயன்படுத்தியதைக் கூட வைக்கலாமே" என்று குறிப்பிட்ட ஒட்டு மொத்த அமைச்சரவையும் சிரிப்பலையால் நிறைந்தது. 

**சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு பதிலளிக்க தயாராகும் அரசு** 
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் கலந்துரையாடப்பட்டது. 
அரசுக்கு எதிரான சில சக்திகள் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு சேறு பூசி வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு செய்ய முடியுமான சகலதையும் செய்திருக்கும் நிலையில் கோவிட் பாதிப்பினால் மக்கள் வீதிகளில் இறந்து விழுவது போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் உட்பட அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 
இறுதியாக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. 

#நிதியமைச்சர் மஹிந்தவின் சாதனை
கடந்த 17 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச. இது அவர் சமர்ப்பிக்கும் 11 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதற்கு முன்னர் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை மஹிந்த சமப்படுத்தினார். 
அத்துடன் இம்முறை மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கையின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதனை சமர்ப்பித்த மறுநாள் சமர்ப்பித்தவரின் 75 ஆவது பிறந்த தினம் வந்தமை விதியின் விளையாட்டு என்று அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார். 
 #வரவு செலவுத் திட்ட உரை
வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக பிரதமர் பி.ப 1 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். சபை முதல்வர் தினேஷ், ஆளும் கட்சி பிரதம கொரடா ஜோன்ஸ்டன் ஆகியோர் அவரை வரவேற்றனர். 
உரை ஆரம்பம் செய்வதற்கான சுப வேளை பி.ப 1.40 க்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமையால் பிரதமர் நேரடியாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் சென்றார். அங்கே நிதியமைச்சின் செயலாளர் ஆடிகல மற்றும் சில அமைச்சர்களோடு கலந்துரையாடினார். சரியாக 1.40 க்கு பிரதமர் உரையாற்ற ஆரம்பித்தார். இந்த உரை சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் அளவுக்கு நீண்டு சென்றது. 
 வழக்கமாக உரையின் பின்னால் நிதியமைச்சர் வழங்கும் தேநீர் விருந்துபசாரம் இம்முறையை உரையின் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இதில் பரவலான பங்குபற்றல் இடம்பெறவில்லை. சுமார் 10 வருடங்களாக இந்த தேநீர் விருந்துபசாரத்தில் பங்குபற்றாமல் இருந்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இம்முறை தனது மகன் பிரமித பண்டார தென்னக்கோன் உடன் வந்து கலந்து கொண்டார். 

 #பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆளும் தரப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் இவ்வாரம் கொண்டாடப்பட்டன. இவர்களில் பிரதமரின் பிறந்த தினம் மிக முக்கியமானதாக இருந்தது. பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அபயாராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் ஏற்பாடு செய்திருந்த பாட்டிமாருக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று அபயாராமவில் நடைபெற்றது. 
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்க சென்ற பிரதமருக்கு SLPJP இன் மொட்டு சின்ன வடிவில் பிறந்தநாள் கேக் தயாரித்து வழங்கி அசத்தினார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க. கேக் வெட்டிய மஹிந்த முதல் துண்டை பிரசன்னவுக்கு வழங்கி மகிழ்ந்தார். 
 இது தவிர ஆளும் கட்சி உறுப்பினர்களான பிரேம்நாத் தொளவத்த, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரின் பிறந்த தினங்களும் இந்த வாரத்தில் கொண்டாடப்பட்டன. பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர் உறுப்பினர்கள். 
அரசியலமைப்பின் 20 ஆவது சீர்திருத்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்த அரவிந்த் குமார் இன் பிறந்த தினமும் இவ்வாரம் வந்திருந்தது. இவ்வாரம் இடம் பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் கூட்டத்தில் அவர் முதல் முறையாக கலந்து கொண்டார். அங்கே அவருக்கு ஒரு பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார். பல ஆண்டுகள் நான் எதிர்க்கட்சியின் இருந்தேன். ஆனால் எனக்கு இவ்வாறான ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. காலையில் பிரதமர் நேரடியாக என்னை வாழ்த்தினார். நான் அடைந்த மிகச்சிறந்த பிறந்தநாள் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் அரவிந்த குமார். 

 #சஜித் ஐ சந்திக்க வந்த விருந்தினர்
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வருகை தரும் போது அவரை சந்திக்க ஒரு விருந்தாளி காத்திருந்தார். 
அவர் கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐதேக சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய. சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் அவர் வருகை தந்திருந்தார். அவருடன் சுமார் அரை மணிநேரம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றத்துடன், SJB இன் புத்திஜீவிகள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ள முன்வருமாறு சஜித் வேண்டிக் கொண்டார். அதன் பின்னர் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவோடும் கிரிஷ்மால் கலந்துரையாடினார். 

 #குறைகேள் எதிர்க்கட்சி
கிரிஷ்மாலுடன் கலந்துரையாடிய சஜித் நேரடியாக சென்றது தொலைபேசி அழைப்பு நிலையத்திற்காகும். கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளமை குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு எதிர்பாராத மக்கள் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக ஹரீன், மனுஷ, மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் போன்றோர் தொடர்ந்து மக்களின் குறைகளைக் கேட்டு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் குறைகளை பாராளுமன்ற உறுப்பினர்களே நேரடியாக கேட்டு பதிவு செய்து வருகின்றனர். 
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த சஜித் இந்த செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார். நீண்ட நேரம் மக்கள் குறைகளை கேட்டு பதிவு செய்த அவர் "இவ்வாறு பதிவு செய்யும் விடயங்கள் ஒரிஜினல் ஐ இங்கே வைத்துக் கொண்டு பிரதி ஒன்றை எனக்கு தாருங்கள். வண்டியில் செல்லும் போது வாசித்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்" எனத் தெரிவித்தார். 
"பாராளுமன்ற கூட்டம் உள்ளது. இல்லையென்றால் நாள் முழுவதும் இருந்து பொது மக்களின் குறைகளைக் கேட்டிருப்பேன்" என்று சொன்ன எதிர்க்கட்சி தலைவர் சஜித், குறித்த செயற்பாடு இடம்பெறும் பொறிமுறை தொடர்பிலும் ஹரீனிடம் விபரங்களை கேட்டறிந்தார். "நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவர் இங்கே வருகிறோம். மக்களின் குறைகளை கேட்கிறோம். அவற்றை பதிவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அதன் பின்னர் உரிய தரப்பிற்கு அவற்றை வழங்கி தீர்வினை வழங்க தேவையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம்" என ஹரீன் விளக்கினார். 
 "இந்த வேலை அரசுக்கு மிகுத்த பாதிப்பை உருவாக்கியுள்ளது. இன்று நாம் மக்களின் குறைகேள் அதிகாரிகளாகியுள்ளோம்."என்று சஜித் கூறினார். 

 #பச்சை மீன் சாப்பிட்ட திலீப்
பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியைத் தொடர்ந்து இலங்கையின் மீன் விற்பனை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் சிறிய, பெரியாளவிலான மீன் வியாபாரிகளின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னமும் மக்கள் மீன் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். 
இந்நிலையில் மீனவர்களுக்காக துணிந்து குரல் கொடுத்தால் SJB பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி. "மீன் சாப்பிடுவதன் மூலம் கொரோனா பரவும் என்று சிலபேர் தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையில் அது பொய். அதனை நிரூபிக்க நான் பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டுகிறேன் என்று தெரிவித்த திலீப் தான் கொண்டு வந்திருந்த மீனின் ஒரு பகுதியை பச்சையாக உண்டு காட்டினார். இவ்விடயம் ஊடகங்களில் வெளியானது. சிலர் இதனை மோசமான செயலாக கூறினார். 
 இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் "உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் மீனவ சமூகம் மிக சிக்கலான நிலைமையில் உள்ளது. அரசு அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இவ்வாறான நிலையில் அவர்களுக்காக பேச நீங்கள் முன் வந்துள்ளீர்கள்" என்றார். 
"பச்சையாக மீன்களை உண்ணும் வழக்கம் ஜப்பான் உட்பட கீழைத்தேய நாடுகளில் உள்ளது. இது தெரியாத சிலர் இதனை விமர்சனம் செய்கின்றனர்." என மனுஷ எம்பி கூறினார். 
"திலீப் பயமில்லாமல் செய்த இவ்விடயம் மிகப்பெரிய ஒரு விடயம். அரசு செய்ய வேண்டிய வேலையை நாம் செய்துள்ளோம். இது பையாக்களுக்கு (மொட்டு கட்சியினரை குறிக்க பயன்படும் சொல்) நகைச்சுவையாக இருந்தாலும் சர்வதேச ஊடகங்களில் நல்ல விதமாக எடுத்துக் கொள்வார்கள்" என்று எதிர்வு கூறினார் ஹரீன். அவர் சொன்னவாறே சர்வதேச ஊடகங்கள் பல இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. 

#ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுத்த சஜித்
அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பாரிய வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்றில் தெரிவித்தார் சஜித். 
"இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. அரசின் தோல்வி ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தம்மை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அடக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அவர்களை சிறைக்கு அனுப்ப கொண்டு செல்லும் ஊடக வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஒரு போதும் நாங்கள் இதற்கு இடமளிக்கப் போவதில்லை. அதற்கு எதிராக நாம் போராடுவோம். அரசியலமைப்பை ஒரு முறை படிக்குமாறு அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். எந்த வகையிலான ஊடக அடக்குமுறைக்கு அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு நாங்கள் எதிராவோம். அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அரசு மீறுகிறது" என காரசாரமாக விமர்சனம் செய்தார். 

 #பட்ஜெட் பற்றிய எதிர்க் கட்சிக் கூட்டம்
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி சமரதுங்க உட்பட அறிஞர் குழாம் ஒன்று வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தனர். "இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு உணரத்தக்க எந்த சலுகையையும் அரசு வழங்கவில்லை" என கலந்துரையாடலை ஆரம்பித்தார் இரான் எம்பி. 
 "அரசு நாம் பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து பேசுகிறது. நாம் ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொண்டதை விட அதிகமாக கடந்த ஆண்டில் கடன் பெறப்பட்டுள்ளது" என்று அசோக் எம்பி கூறினார். 
 "இந்த அரசாங்கம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேலை செய்கிறது. வெளிநாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை ஒரு வீத தண்டப் பணத்தை செலுத்தி நாட்டிற்குள் கொண்டு வர வரவு செலவுத் திட்டத்தினுடாகவே முன் மொழியப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான கறுப்புப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அனுமதிக்கும் உத்தியோகபூர்வ ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார் கலாநிதி ஹர்ஷ எம்பி. இதே நேரம் சஜித் பொருளாதார விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் விளக்கங்கள் கோரி தெளிவு பெற்றுக்கொண்டார். 

 #அனுர குமாரவின் பாராளுமன்ற உரை
பாராளுமன்றத்தில் எப்போதுமே சிறப்பான உரைகளை ஆற்றுபவர் ஜேவிபி தலைவர் அனுர. வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து காத்திரமான உரையொன்றை ஆற்றியிருந்தார். 
குறிப்பாக இலங்கை 5 விதமான பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக உதாரணங்களுடன் விளக்கிய அவர் சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகள் பின்பற்றிய தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு இந்நிலையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். 
 1974 ல் இலங்கையிலும், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நாணயத் தாள்களை பாவனையில் இருந்து அகற்றி கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தது போல் அல்லாமல் 1 வீத தண்டம் செலுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். 
அத்துடன் கடன், தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகிய இரண்டும் தவிர வேறு அரசிற்கு மார்க்கங்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் மொத்த தேசிய உற்பத்தியின் விகிதமாக அரச வருமானத்தின் விகிதத்தை சுட்டிக்காட்டிய அனுர எம்பி வலயத்தில் ஏனைய நாடுகள் மற்றும் உலகின் பல நாடுகளோடு ஒப்பிட்டதுடன் இலங்கை எந்தளவு பின்தங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். 
அத்துடன் மொத்த அரச செலவினத்தில் 28% மட்டுமே அரசின் வருமானங்கள் என்றும் இதற்கான தீர்வுகள் அரசிடம் இல்லையென்றும் கூறினார். புகழ் பெற்ற டைட்டானிக் விபத்தின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை கூறி அவர் உரையை நிறைவு செய்தார். "பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கடலில் மூழ்க சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் சென்றது. அந்த இரண்டரை மணித்தியாளங்களும் கப்பலில் இருந்த வாத்தியக் குழுவினர் இசைத்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறே இலங்கையும் கடன் என்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் உரையை நிறைவு செய்தார். 

 #ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய யாப்பு
எங்கள் தேசிய முன்னணி என்ற கட்சியை வாங்கியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. இதன் யாப்பு எங்கள் தேசிய முன்னணியின் யாப்பாகவே இருந்தது. கட்சியின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு யாப்பை திருத்தி புது யாப்பு ஒன்றை உருவாக்க செயலாளர் ரஞ்சித் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு ஆரம்ப கட்ட யாப்பு முன்மொழிவை தயாரித்து முடிந்துள்ளது. இதனை கட்சி மேலிடத்திற்கு வழங்கி அவர்களின் ஆலோசனையின் பின்னர் பூரணப்படுத்தப்படும். 
SJB இற்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனவரி மாதம் ஆரம்பிக்க கட்சி தீர்மானித்துள்ளது. 

 #கொழும்பில் தரித்த ருவன்
பிரயாண கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாரம் ஐதேக பிரதித் தலைவர் ருவன் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். எனினும் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. கம்பஹா மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் பலர் தொலைபேசி வாயிலாக தமது குறைபாடுகளை முன்வைத்தனர். 
5000 ரூபா நிவாரணம் பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்கும் சிரமங்களை பல குறிப்பிட்டனர். அவற்றை பொறுமையாக கேட்ட ருவன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். 

 #பாடசாலை மீள ஆரம்பம்
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சர் கடந்த வியாழக்கிழமை அறிவித்தமையைத் தொடர்ந்து அது தொடர்பான வாத விவாதங்கள் சூடு பிடித்தன. 
தற்போதைய நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளை மையப்படுத்தி புதிய கொத்தணி ஒன்று உருவானால் பொறுப்பேற்பது யார் என்ற தொனியில் கல்வி சார் தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்தன. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்யும் வாகன உரிமையாளர் சங்கமும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. 
இவை இவ்வார நடவடிக்கைகளே. அடுத்த வாரம் புதிய தலைப்புகள் சூடு பிடிக்கலாம். ஏனைய தலைப்புகளை மிஞ்சி கொரோனா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கலாம். பாடசாலை ஆரம்பித்தல் விவகாரம், வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் போன்ற தலைப்புகள் பேசப்படலாம். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.