வருடத்திற்கு 20 மில்லியன் சிறுவர்கள் இணைய வழியில் துஷ்பிரயோகம்! தற்கொலைக்கும் முயற்சி! அதிர்ச்சியூட்டும் காரணங்கள்!!



சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் 20 மில்லியன் சிறுவர்கள் ஒரு வருட காலத்திற்குள் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சுமார் 21,000 இணையப் பயன்பாட்டாளர்களைக் கொண்டு இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. 

இதில், ஐந்தில் ஒரு சிறுவர் கடந்த ஓராண்டில் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் அச்சுறுத்தலையோ அல்லது பாதிப்பையோ சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

துஷ்பிரயோகத்தின் தன்மைகள்:
சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத, தேவையற்ற பாலியல் உள்ளடக்கங்களை இணையத்தில் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. 

9 மில்லியன் சிறுவர்கள் பாலியல் தொடர்பான உரையாடல்களில் ஈடுபடவும், புகைப்படங்களைப் பகிரவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். 

4 மில்லியன் சிறுவர்களின் தனிப்பட்ட பாலியல் புகைப்படங்கள் அவர்களின் ஒப்புதல் இன்றியே மற்றவர்களுக்குப் பகிரப்பட்டுள்ளன. 

சமூக ஊடகங்களின் பங்கு: 
இப்படியான பாதிப்புகள் பெரும்பாலும் பிரபலமான சமூக வலைதளங்கள் மூலமாகவே நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, முகநூல் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), ஸ்னாப்சாட் (Snapchat), மற்றும் டிக்டொக் (TikTok) போன்ற தளங்கள் வாயிலாக 60 சதவீத சம்பவங்களும்,  இணையவழி விளையாட்டுகள் (Online Games) மூலம் 14 சதவீத சம்பவங்களும் நடந்துள்ளன. 

தொடர்புடைய நபர்கள் யார்? 
இதில் பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களே சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

அதேநேரம், 38 சதவீத நிகழ்வுகளில் துஷ்பிரயோகம் செய்த நபர்களைச் சிறுவர்கள் இணையத்தில்தான் முதன்முதலாகப் பழகியுள்ளனர். 

எனினும், இந்தத் துஷ்பிரயோகங்கள் குறித்து காவல்துறைக்கோ அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கோ 1 சதவீதத்திற்கும் குறைவான புகார்களே கொண்டு செல்லப்படுகின்றன. 

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, சுமார் 1.1 மில்லியன் சிறுவர்களின் உருவங்களை போலியாகப் பாலியல் ரீதியில் சித்தரித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக 9 நாடுகளில் பதிவாகியுள்ளது. 

இவ்வாறான இணையவழிப் பாலியல் அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் சிறுவர்களிடையே, தற்கொலை எண்ணங்களும் தங்களுக்குத் தாங்களே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளும் குணங்களும் சாதாரண சிறுவர்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக யுனிசெப் எச்சரித்துள்ளது. 

துரித நடவடிக்கைகள்: 
இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த, தொழில்நுட்ப நிறுவனங்களும் உலக நாடுகளின் அரசாங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என யுனிசெப் வலியுறுத்தியுள்ளது. 

இதற்காகக் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களைப் புதுப்பிக்கவும், புதிய தொழில்நுட்ப அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப சட்டங்களை மேம்படுத்தவும், புகார் அளிக்கும் நடைமுறைகளை எளிதாக்கவும் யுனிசெப் கோரிக்கை விடுத்துள்ளது. 


Previous:
வருடத்திற்கு 20 மில்லியன் சிறுவர்கள் இணைய வழியில் துஷ்பிரயோகம்! தற்கொலைக்கும் முயற்சி! அதிர்ச்சியூட்டும் காரணங்கள்!! வருடத்திற்கு 20 மில்லியன் சிறுவர்கள் இணைய வழியில் துஷ்பிரயோகம்! தற்கொலைக்கும் முயற்சி! அதிர்ச்சியூட்டும் காரணங்கள்!! Reviewed by Irumbu Thirai News on September 03, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.