முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள்


20 வருடங்களுக்குப் பிறகு ஆப்கான் மண்ணிலிருந்து 31-08-2021 திகதியோடு அமெரிக்க தலைமையிலான படைகள் முழுமையாக வெளியேறியிருக்கின்றன. இது தொடர்பான 30 தகவல்களை இங்கே தருகிறோம்.

1) 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஆப்கானில் ஆட்சியிலிருந்த தலிபான்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக குற்றம் சுமத்தியே இந்த படையெடுப்பு நடைபெற்றது.

 

2) 1996 - 2001 வரை ஆட்சியில்  தலிபான்கள் இருந்தனர். தற்போது 20 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.

 

3)   ஆப்கானுக்கு படையெடுப்பை ஆரம்பித்தவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்.

 

4) படையெடுப்பு ஆரம்பித்ததன் பின்னர் தற்போதுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் 4வது அதிபர் ஆவார்.

 

5) ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் குடியரசு கட்சியையும் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோர் ஜனநாயக கட்சியையும் சேர்ந்தவர்கள்.

 

6) பராக் ஒபாமாவின் காலத்தில்தான் ஆப்கானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை அமெரிக்க படையினர் அதிகரிக்கப்பட்டனர். மேலும் இவரது காலத்தில்தான் பாகிஸ்தானில் வைத்து ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

 

7)  டோனால்ட் டிரம்ப் இன் காலத்தில்தான் அமெரிக்க படைகளை மீளப் பெறுவதற்கான ஒப்பந்தம் தலிபான்களுடன் கைச்சாத்திடப்பட்டது. தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதை முடித்து வைத்துள்ளார்.

 

8) 2001-2019 வரை ஆப்கான் போருக்காக அமெரிக்கா சுமார் 822 பில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளது.  இதன் கூட்டணி நாடுகளான பிரிட்டன் மற்றும் ஜெர்மனி முறையே 30 பில்லியன் மற்றும் 19 பில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளன. 

 

9)  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் மற்றும் ஜெர்மனி  நாட்டுப் படைகளே ஆப்கானில் அதிகமாக இருந்தனர்.

 

10) அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டே ஆப்கானை விட்டு வெளியேறிவிட்டன.

 

11)  2001 முதல் இதுவரை சுமார் 2400 அமெரிக்கப் படையினர் ஆப்கான் மண்ணில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

12) இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதோடு அவரது அல்கைதா இயக்கமும் வலிமை குன்றச் செய்யப்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பைடன் கூறியிருந்தார்.

 

13)  வேறொரு நாட்டின் உள்நாட்டுப் போரில் இனிமேல் அமெரிக்க துருப்புகளை பங்கெடுக்க வைக்க மாட்டோம் எனவும் பைடன் தெரிவித்தார்.

 

14)  இரட்டை கோபுர தாக்குதலில் 20 ஆவது ஆண்டு நிறைவு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி. அதற்கு முன்னர் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றப்படும் என ஜோ பைடன் அறிவித்ததும் தலிபான்கள் ஆப்கானில் பல்வேறு பகுதிகளை விரைவாக கைப்பற்றத் தொடங்கினர்.

 

15)  ஆப்கான் ராணுவத்தின் கையில் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களை ராணுவத்தின் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தாலிபான்கள் கைப்பற்றினர்.

 

16)  எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகவே தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர்.

 

17) உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன ஆப்கானுக்கான தமது நிதி உதவிகளை நிறுத்தி உள்ளன.

 

18)  அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் ஆப்கானியர்கள். 

 

19) ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர் கிறிஸ் டோஹன்யு என்பவர். இவர் அமெரிக்காவின் 82வது ஏர்போன் படைப்பிரிவின் கமாண்டிங் ஜென்ரல் பதவியில் உள்ளவர்.

 

20) அமெரிக்க படை முழுமையாக வெளியேறியதும் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து தலிபான்கள் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஆப்கானுக்கு  தற்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக தலிபான் உயர்பீடம் அறிவித்தது.

 

21)  விமான நிலைய வளாகத்தில் பல கனரக ஆயுதங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் என்பவற்றை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை விட்டுச் சென்றுள்ளது.

 

22) விட்டுச்சென்ற ஆயுதங்களோடு விமான நிலைய பாதுகாப்பில் தலிபான்கள்  ஈடுபடும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

 

23)  விமான நிலையத்தில் வைத்து தமது படைகளுக்கு உரையாற்றிய தலிபான் செய்தி தொடர்பாளர், நமது நேர்மை மற்றும் பொறுமையால்தான் இன்று இந்த நாடு அந்நிய சக்திகளிடம் இருந்து விடுபட்டுள்ளது. இன்னுமொரு அந்நிய படையெடுப்பு இங்கு நடக்கக்கூடாது.  நமக்கு மகிழ்ச்சியும் வளமும் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கும் தேவை.  பொது மக்களுக்கு மரியாதை கொடுங்கள். நாம் எப்பொழுதும் அவர்களின் சேவகர்கள் என்றார்.

 

24) அமெரிக்க வரலாற்றிலேயே சண்டையில் ஈடுபடாமல் இடம்பெற்ற மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கை  இதுதான் என அந்நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த ஜெனரல் பிராங்க் மக்கன்சி தெரிவித்துள்ளார்.

 

25)  இனிமேல் ஆப்கானிஸ்தானுடன் வெளியுறவு தொடர்பு மாத்திரமே இருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கான அலுவலகம் ஆப்கானில் இருக்காது. கட்டார், தோஹாவிலிருந்து அலுவலகம் இயங்கும் என தெரிவித்துள்ளது.

 

26) பாடசாலைகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள் இருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் முன்னர் போல் பெண்கள் கல்விக்கு தடை விதித்ததாக தகவல்கள் இல்லை.

 

27) அமையப்போகும் ஆட்சி தொடர்பில் தமது மூத்த தலைவர்களுடன் மூன்று நாட்களாக நடந்த கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தலிபான் அறிவித்துள்ளது.

 

28) பஞ்சிர் பிராந்தியம் தவிர்ந்த ஏனைய சகல  இடங்களும் தலிபான் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது.   இது இயற்கையிலேயே மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பள்ளத்தாக்கு பிரதேசமாகும்.

 

29) பஞ்சிர் போராளிகள் தலிபான்களுக்கு எதிரானவர்கள். தாம் ஆயுதங்களோடு தலிபான்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.  தலிபான்கள் பஞ்சிர் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ளதோடு உணவு உட்பட பல்வேறு விடயங்களுக்கான விநியோகத்தையும் துண்டித்து உள்ளனர்.

 

30)  அமெரிக்காவின் போர் முடிந்து விட்டது. ஆனால் ஆப்கான் மக்களின் போர் இன்னும் முடியவில்லை.

தொகுப்பு: irumbuthirainews.com 

 

Join our Telegram channel:

https://t.me/irumbuthirainews

முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள் முழுமையாக வெளியேறிய அமெரிக்க படைகள்: முக்கிய 30 தகவல்கள் Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.