Results for Local News

News Updates in Tamil (2.4.2026)

April 02, 2026


(2.4.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்) 

நாட்டின் தற்போதைய நீர்முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் - நினோ நிலைமை மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் முகாமைத்துவம் குறித்த இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 



அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 



2026ம் ஆண்டு முதல் பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை இணைத்துக் கொள்வது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 



தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், தமது தேசிய உயர் செயல்திறன் மையத்தின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ரையான் வான் நீகெர்க்கையும் (Ryan van Niekerk), களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜோர்டன் கிரெகரியையும் (Jordan Gregory) நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் ஆண்கள் தேசிய அணி உட்பட அனைத்து தேசிய அணிகளினதும் குறிப்பிட்ட துறைகளை மேற்பார்வை செய்யவுள்ளனர். 



தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 



இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 



நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இன்று (02) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத்தை சுழற்சி முறையில் இடைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 



இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, தமக்கு "தடை இல்லா சான்றிதழ்" கடிதத்தை வழங்குமாறு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02) காலை காலமானார். 



பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும், எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Previous:

News Updates in Tamil (2.4.2026) News Updates in Tamil (2.4.2026) Reviewed by Irumbu Thirai News on April 02, 2026 Rating: 5

News Updates in Tamil (1.4.2026)

April 01, 2026


(1.4.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்.. )


தற்போது நிலவும் கடும் வெப்பம், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை வைத்தியர் சோபாத் விஜயரத்ன தெரிவித்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்குள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம். விலங்குகள் நாக்கை வெளியே தள்ளி மூச்சு வாங்குவதை நாம் அவதானிக்கலாம். பூனைகளும் அவ்வாறே செய்யும். இவ்வாறான நிலையில், உடனடியாக ஐஸ் கட்டிகளை வழங்குங்கள், உடலை நனையுங்கள் அல்லது கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். பகல் நேரங்களில் நாய்களுக்கு முகக்கவசம் அணிவிப்பதைத் தவிர்க்கவும். நாய் இருக்கும் இடத்தில் எப்போதும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்துங்கள், தண்ணீரில் ஐஸ் கட்டிகளைப் போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 



இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய போட்டியில் அறிமுகமாகியுள்ளார். 



இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 



2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. 



கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களின் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 



தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், வைத்தியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகச் சேவையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தமது சங்கத்தைச் சேர்ந்த 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அவ்வாறு அடிமைகளாகப் பணியாற்றத் தயாரில்லை என அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 



ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலம் முடிந்து ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் இருக்கும். எனினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 



பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 



எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 



இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 12 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 



தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 



திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 43 இலட்சம் ரூபாவை வட்ஸ் அப் செயலியூடாக தந்திரமாக அபகரித்த பெண் ஒருவரை திருகோணமலை காவல்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று(01) காலை கைது செய்துள்ளனர். 



நியாயமற்ற இடமாற்றங்களைக் கண்டித்து, நாளை ( 02) நாளை மீண்டும் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 



நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டல்களை உடனடியாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்குக் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Previous:
News Updates in Tamil (1.4.2026) News Updates in Tamil (1.4.2026) Reviewed by Irumbu Thirai News on April 01, 2026 Rating: 5

News Updates in Tamil (31.3.2026)

March 31, 2026

( 31.3.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்...)

பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் சராசரியாக 75% இற்கும் அதிகமாகவே உள்ளது. எனவே, இந்த போகத்திற்கான நீரை வழங்க முடியும். குடிநீர் தேவைக்காக ஆறுகளில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும் இடங்களில் உவர் நீர் உட்புகும் அபாயம் காணப்படலாம். குறிப்பாக நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என நீர்ப்பாானத் திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் முகாமை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். 



காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது 



மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது. மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பில் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் அவரது 22 வயதுடைய சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இரு நகைக்கடை உரிமையாளர்களும் மற்றும் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட ஆறு பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கவரண்டிகள், ஒரு கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டனர். விசாரணைகள் தொடர்கின்றன. 



1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர் நீதிமன்றம் இன்று (31) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 



மார்ச் மாதத்தின் கடந்த 29 நாட்களில் 175,661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது 



ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 



மீதொட்டமுல்ல "பொதுவில் கும்புர" எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர சபை மற்றும் கொலன்னாவை நகர சபை ஆகியன அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எவ்வாறாயினும், குப்பைமேடு சரிந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதிவாதிகளால் ஏற்கனவே 908,314,020.70 ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் கீழ் மீண்டும் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்போவதில்லை என நீதிமன்று அறிவித்தது. 



மே 10ஆம் திகதியாகும் போது சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். கடந்த 13 வருடங்களாக இவ்வாறான முறையான நடைமுறை ஒன்று இடம்பெறவில்லை. இடமாற்றச் சபைகளில் இருந்ததாகக் கூறிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சில இடங்களில் 13 முதல் 17 வருடங்கள் வரை தங்கியிருந்தனர். இந்த முறையான இடமாற்றச் செயல்பாட்டின் மூலம், குறிப்பிட்ட சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல வைத்தியர்களுக்கு நீதி கிடைப்பதாகவும் இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 



முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர்கள் இருவர், சதொச நிறுவனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் மற்றும் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 



நாளை (01) அதாவது ஏப்ரல் 01ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 



இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 



மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்காக எவ்வித மின்சாரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 



சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 



கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2026 பெப்ரவரி மாதத்திலிருந்த 1.6% இலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உணவுப் பணவீக்கமானது 2026 பெப்ரவரியில் நிலவிய 0.2% இலிருந்து மார்ச் மாதத்தில் 0.7% ஆகவும், உணவல்லாத தொகுதியின் பணவீக்கம் 2.3% இலிருந்து 2.9% ஆகவும் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 



நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 



ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை வேரலவத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 



இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 



சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினத்திலிருந்து சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மத்திய மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 



அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றுக்கும் அதிகமான அளவில் தானாக முன்வந்து குறைத்துக் கொண்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

- x -


Previous;
News Updates in Tamil (31.3.2026) News Updates in Tamil (31.3.2026) Reviewed by Irumbu Thirai News on March 31, 2026 Rating: 5

News Updates in Tamil (30.3.2026)

March 30, 2026

(30.3.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)


2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 



கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 



யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். 



முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை நிராகரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 



நாளை (31) மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது. 



பொதுமக்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காக, தேர்தல் ஆணைக்குழு தனது இணையவழி "தேர்தல் இ-சேவை" (E-Services) முறையை மேலும் விரிவாக்கியுள்ளது. இதன்படி, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேரில் செல்லாமலேயே, இணையம் ஊடாகத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். 



அரகலய' போராட்டக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடவியல் கணக்காய்வு (Forensic Audit) ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 



மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையையடுத்து, நாட்டில் யூரியா உரக் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதால், நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது. 



முறைைற்ற இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருப்பமின்றி நாளை (31) காலை 08.00 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 



2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது. இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 



வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 



1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாகக் காத்தான்குடிக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை தொடர்ந்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30) முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. 



இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 



நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். 



குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

-- x --
News Updates in Tamil (30.3.2026) News Updates in Tamil (30.3.2026) Reviewed by Irumbu Thirai News on March 30, 2026 Rating: 5

News Updates in Tamil (29.3.2026)

March 30, 2026

(29.3.2026 வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)


நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக காயங்களுக்கு உள்ளானதாலும், அவர்களின் மோசமான ஆட்டத்திறன் காரணமாகவும், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டு அமைச்சு இணைந்து வீரர்களுக்காகப் புதிய உடற்தகுதிப் பரிசோதனை முறையைத் தொடங்கியது. இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற 46 வீரர்களில் 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க நாளை (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். 



வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" தேசிய திட்டம் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே "சுரகிமு லங்கா" திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்தத் திட்டம் இன்றிலிருந்து அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 



ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்ல 'சுஹுருபாய' தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு ஒருநாள் சேவையின் கீழ் வருகை தந்து, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம், நாளை (30) ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 



நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது. 



அரிசியைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, அதனைச் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த சில வர்த்தகர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். 



குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது நேற்று (28) 635 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 




உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக இருந்தால், அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். 




தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 



இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது. இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 



ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது 




இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தும் நோக்கில், “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) எனும் விசேட பயிற்சிநெறி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது. 



நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பேருந்துகள் அல்லது கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்தாத பேருந்துகள் குறித்து பொதுமக்கள் பின்வரும் இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி: 011 2860860 வட்ஸ்அப்: 070 2860860 தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC): அவசர இலக்கம்: 1955 வட்ஸ்அப்: 071 2595555 



மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
-- x --
News Updates in Tamil (29.3.2026) News Updates in Tamil (29.3.2026) Reviewed by Irumbu Thirai News on March 30, 2026 Rating: 5

Sri Lanka News Updates 28.3.2026

March 29, 2026

(28.3.2026 வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)



ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில், வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் உட்பட மூவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். 



 உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தி எக்கோனமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் சொந்தமாக ஒரு வீட்டைக் கொள்வனவு செய்வது எட்டாக்கனியாக மாறியுள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.



கேகாலை - அம்பேபுஸ்ஸ பகுதியில் 1200 லீற்றர் டீசலை சட்டவிரோதமாக விற்று வந்த நடமாடும் வாகனமும், ஒரு நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 



 சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதைத் தடுப்பதற்காக, ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 



 இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயர்வாகவே காணப்படும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



 குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்த துறவி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். காவல்துறை வழங்கிய தகவலின்படி, உயிரிழந்த துறவி செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 



 இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் அதிகரிப்பு 



 பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



 இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகன நடத்துனர்களுக்கு 400,000 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


 வாகனங்கள் இன்றி இயந்திரங்கள் மூலம் விவசாயம், கடற்றொழில் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடுவோருக்காகப் புதிய QR குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. உழவு இயந்திரம், படகுகள் மற்றும் ஏனைய இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். பொதுமக்கள் தமது எரிபொருள் தேவை குறித்து கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்திற்குத் தெரியப்படுத்துவதன் மூலம் இதனைப் பெற்றுக்கொள்ளலாம். 



 மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாகனப் பதிவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, நேற்றிரவு (27) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) அவர் கைது செய்யப்பட்டார். 



 நீர்கொழும்பு பகுதியில் சுற்றுலாவிசாவில் நாட்டிற்கு வருகை தந்து இணையவழி மோசடியில் ஈடுபட்ட 45 வெளிநாட்டுபப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சீனா, மலேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என தெரிய வந்துள்ளது. 



 இலங்கை தொடருந்து திணைக்களம், CSRP செயற்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் முதல் 'ஸ்மார்ட்' பயணச்சீட்டு (Smart Ticketing) முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள காகித பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதே நோக்கமாகும். 



 இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் கல்விப்புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 



 இந்த மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் தெரிவித்துள்ளார். 



 இந்தியாவின் திருச்சி, கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 39 வயதான ஆர். கோகுலேஸ்வரன் என்பவர், தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்தியப் பிரஜையாக முதல்முறையாகத் தனது வாக்கைப் பதிவு செய்யவுள்ளார்.

-- xx--
Sri Lanka News Updates 28.3.2026 Sri Lanka News Updates 28.3.2026 Reviewed by Irumbu Thirai News on March 29, 2026 Rating: 5

மீண்டும் அமுலாகிய QR Code: பெற்றுக் கொள்ளும் முறை இதோ!

March 15, 2026


மத்திய கிழக்கில் நடந்து வரும் நெருக்கடியுடன் தொடர்புடைய எரிபொருள் விநியோகம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் எரிபொருள் QR முறையை மீண்டும் நள்ளிரவு 12 மணி முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நியூஸ்ஃபஸ்ட் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டதை அடுத்து பதிவு செய்வதற்காக ஏராளமானோர் குறித்த இணையதளத்திற்கு சென்றாலும் பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை, இதை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மின்சக்தி அமைச்சகமோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 


இவ்வாறாயினும் QR Code ஐ பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கிற்கு சென்று உரிய படிமுறைகளை பின்பற்றவும். 



அதன் பிறகு QR குறியீட்டின் வடிவத்தில் ஒரு தனித்துவமான எரிபொருள் பாஸ் காட்டப்படும். - இதை ஒரு மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டோ அல்லது பிரிண்ட் செய்தோ எரிபொருள் நிலையங்களில் காட்டி உங்களுக்கான எரிபொருளை பெறலாம்.

தற்போது வரை (15.3.2026 01.20 AM) குறித்த இணையதளத்தில் பின்வருமாறே காட்டப்படுகிறது



மீண்டும் அமுலாகிய QR Code: பெற்றுக் கொள்ளும் முறை இதோ! மீண்டும் அமுலாகிய QR Code: பெற்றுக் கொள்ளும் முறை இதோ! Reviewed by Irumbu Thirai News on March 15, 2026 Rating: 5
Powered by Blogger.