அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில:


அல்குர்ஆனை தான் 02 முறை முழுமையாக வாசித்ததாகவும் எந்த ஒரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியையும் அதற்கு அமைச்சர் வழங்கிய பதிலையும் இங்கு தருகிறோம்... 
ஊடகவியலாளர்:- அமைச்சராகிய நீங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அல்குர்ஆன் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை ஆய்வு செய்தா முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தீர்கள்? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், 
அல்குர்ஆனை முழுமையாக படித்த பின்னே நான் கருத்து தெரிவித்தேன். அல்குர்ஆனை நான் 2 முறை வாசித்தேன். அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை. அல்குர்ஆன்; தொடர்பில் நான் விசேட நிபுணர் அல்ல. விசேட நிபுணர் யாராயினும் நான் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். 
குர்ஆனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி நான் இதனை தெரிவித்தேன். குர்ஆனில் இந்த சடல அடக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால் இது குறித்து எவரும் பதிலளிக்கவில்லை. 
சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக குர்ஆன் குறித்து தகவல்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் எதிலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை. அதேவேளை தகனம் செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் செல்லப்பட்டும் இல்லை. 
நான் அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் பேச்சாளராகவே வந்துள்ளேன். எனது தனிப்பட்ட, கட்சி தொடர்பான கேள்விகள் கேட்க விரும்பினால் அவை தொடர்பில் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டிலே வினவ வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.