Results for Education

Grade 5 Scholarship: Performance of Candidates- 2026

September 14, 2026


2026-ஆம் ஆண்டின் இலங்கை 5-ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான முக்கிய தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகள் வருமாறு:.

1. பொதுவான பரீட்சை முடிவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்

  • தோற்றிய பரீட்சார்த்திகள்: 2026-ஆம் ஆண்டில் மொத்தம் 289,867 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். (2021-இல் 335,158 ஆக இருந்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 2026 வரை படிப்படியாகக் குறைந்துள்ளது).
  • வெட்டுப்புள்ளியை (Cut-off) எட்டியவர்கள்: 56,000 மாணவர்கள் (19.32%) வெட்டுப்புள்ளியை எட்டி, உதவித்தொகை பெறவும் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கவும் தகுதி பெற்றுள்ளனர்.
  • 100 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்றவர்கள்: 90,989 மாணவர்கள் (31.39%) 100 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
  • 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்றவர்கள்: 213,287 மாணவர்கள் (73.58%) 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
  • சராசரிப் புள்ளி: 2026-இல் மாணவர்களின் தேசிய சராசரிப் புள்ளி (Mean of Marks) 106.48 ஆகவும், திட்ட விலகல் (Standard Deviation) 30.66 ஆகவும் பதிவாகியுள்ளது.
  • பொதுவான வெட்டுப்புள்ளிகள்: 2026-ஆம் ஆண்டில் சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு 139 ஆகவும், தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு 135 ஆகவும் வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2. மாகாணங்கள் வாரியான செயல்திறன்

  • வெட்டுப்புள்ளியில் முன்னணி மாகாணங்கள்: சபரகமுவ மாகாணம் (24.48% - 6,715 மாணவர்கள்) முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஊவா மாகாணம் (22.56%) இரண்டாமிடத்தையும், தென் மாகாணம் (22.01%) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
  • 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாகாணங்கள்: 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதத்திலும் சபரகமுவ மாகாணமே (77.37%) முதலிடத்தில் உள்ளது.
  • குறைந்த சதவீதம் பதிவுசெய்த மாகாணங்கள்: கிழக்கு மாகாணம் (14.75%), மத்திய மாகாணம் (15.46%), வட மாகாணம் (16.79%) ஆகிய மாகாணங்கள் வெட்டுப்புள்ளியை எட்டியதில் குறைந்த சதவீதங்களைப் பதிவுசெய்துள்ளன.

3. மாவட்டங்கள் மற்றும் கல்வி வலயங்களின் நிலை

  • மாவட்ட அளவில் வெட்டுப்புள்ளி சாதனை: அம்பாந்தோட்டை மாவட்டம் (27.53%) முதலிடத்தையும், இரத்தினபுரி மாவட்டம் (25.35%) இரண்டாமிடத்தையும், குருணாகல் மாவட்டம் (24.43%) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
  • 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாவட்டங்கள்: குருணாகல் (79.72%), கேகாலை (79.02%), அம்பாந்தோட்டை (78.28%) ஆகிய மாவட்டங்கள் அதிக தேர்ச்சி சதவீதத்தைக் காட்டியுள்ளன.
  • கல்வி வலயங்கள்: 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் தேர்ச்சியில் கேகாலை கல்வி வலயம் (82.83%) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

4. சிறப்புத் தேவைகளுடைய மாணவர்களுக்கான உதவித்தொகை

  • நாடு முழுவதிலும் சிறப்புத் தேவைகளுடைய பிரிவின் கீழ் 261 மாணவர்கள் உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
  • இதில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 51 மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 43 மாணவர்களும், வட மாகாணத்தில் 41 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

5. வருமான நிலை மற்றும் பாலினம் சார்ந்த பகுப்பாய்வு

  • வருமான நிலையின் தாக்கம்: குறைந்த வருமானப் பிரிவு மாணவர்களுடன் ஒப்பிடும்போது, உயர் வருமானப் பிரிவு மாணவர்கள் பகுதி I மற்றும் பகுதி II ஆகிய இரண்டிலும் அதிக புள்ளிகளைப் பெற்றுச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • பாலின வேறுபாடு: பகுதி II பரீட்சையில் ஆண் மாணவர்களை விட பெண் மாணவர்கள் உயர் மதிப்பெண் வரம்புகளில் (91-100 மற்றும் 81-90) அதிக சதவீதத்தைப் பெற்று முன்னணியில் உள்ளனர்.
முழுமையான அறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Grade 5 Scholarship: Performance of Candidates- 2026 Grade 5 Scholarship: Performance of Candidates- 2026 Reviewed by Irumbu Thirai News on September 14, 2026 Rating: 5

பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்கள்

September 04, 2026


கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரை கல்வி கற்கும் சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் இவ்வாறு பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதைப்பொருள் பாவனையே மிக முக்கியமான காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 

இதனால், பாடசாலைக் கல்வியை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அத்துடன், அவர்கள் போதைப்பொருள் பழக்கம் போன்ற ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கு உடனடி மற்றும் துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Previous:
பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்கள் Reviewed by Irumbu Thirai News on September 04, 2026 Rating: 5

புலமைப் பரிசில் பெறுபேறுகளை வைத்து பிள்ளைகளை துன்புறுத்தல்: அமைச்சு விடுத்த கடும் எச்சரிக்கை!

September 02, 2026


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது மனரீதியாகத் துன்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பரீட்சையில் பிள்ளைகளின் செயல்திறனுக்காக அவர்களைத் தண்டிப்பதையோ அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதையோ தவிர்க்குமாறு பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

மேலும், பரீட்சை முடிவுகள் தொடர்பான உள்ளடக்கங்களை, குழந்தைகளுக்கு சங்கடத்தையோ, மன உளைச்சலையோ அல்லது அசௌகரியத்தையோ ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் எதிராக ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் அது எச்சரித்துள்ளது. 

இத்தகைய நடத்தை குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாக அமையக்கூடும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சாத்தியமான அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.


Previous:
புலமைப் பரிசில் பெறுபேறுகளை வைத்து பிள்ளைகளை துன்புறுத்தல்: அமைச்சு விடுத்த கடும் எச்சரிக்கை! புலமைப் பரிசில் பெறுபேறுகளை வைத்து பிள்ளைகளை துன்புறுத்தல்: அமைச்சு விடுத்த கடும் எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on September 02, 2026 Rating: 5

மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை....

August 17, 2026


இலவச பாடப் புத்தகங்களின் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரிக்கத் துறைசார் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாகக் பொலிஸ் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

பொலிஸ் விசாரணைகளின்படி, பாடப் புத்தகங்கள் போக்குவரத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர், முதல் சந்தேகநபர் குறித்த தொகுதி புத்தகங்களை அலவ்வவில் உள்ள ஓர் இடத்திற்கு விற்றுள்ளார். பின்னர், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்தப் புத்தக இருப்பை நாரம்மலவில் உள்ள ஒரு நிலையத்திற்கு மறுவிற்பனை செய்துள்ளார்; அங்கிருந்து அவை பின்னர் வத்தளைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மே 24 ஆம் திகதி இப்பாடப்புத்தகங்களை ஒப்படைத்திருந்தது. இத்தொகுப்பில் தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் மூன்றாம் தவணைக்கான முதலாம் வகுப்புப் பாடப் புத்தகங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. 

இவற்றின் பெறுமதி 800,000 ரூபாய்க்கும் அதிகமாகும். இச்சம்பவம் தொடர்பாக  இதுவரை  ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்  உறுதிப்படுத்தியது.
மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை.... மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை.... Reviewed by Irumbu Thirai News on August 17, 2026 Rating: 5

பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை!

August 16, 2026


ஊடகங்கள் குழந்தைகளின் கருத்துகளை அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பதிவு செய்வதையோ அல்லது வெளியிடுவதையோ தடை செய்து கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய சில மாணவர்கள், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 பரீட்சைக்குப் பின் பிள்ளைகள் வழங்கிய கருத்துகள் மேற்கோள் காட்டப்பட்டு, அவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை அமைச்சு அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பிள்ளைகளின் கருத்துகளைப் பெறவோ, பதிவு செய்யவோ அல்லது ஒலிபரப்பவோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 மேலும், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை! பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 16, 2026 Rating: 5

ரமழான் கால மேலதிக வகுப்புகள்: கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

February 06, 2026


 

ரமழான் காலத்தில் மேலதிக வகுப்புக்கள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

ரமழான் மாதத்தில் பகலில் நோன்பு நோற்பதும் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதும் இடம்பெறுவதால் மேலதிக வகுப்புகள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி இப்தார் ஏற்பாடுகள் பெருநாள் கொண்டாட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



ரமழான் கால மேலதிக வகுப்புகள்: கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! ரமழான் கால மேலதிக வகுப்புகள்: கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 06, 2026 Rating: 5

உ.தர பரீட்சை: பெற்றோருடன் சில நிமிடங்கள்...

November 10, 2025


A/L பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே...... 

எமது பிள்ளைகள் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம். அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பரீட்சைக்கு தைரியமாக முகம் கொடுக்க வழிகாட்டலாம். 

1. அமைதியாக பேசுவோம் 
பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுவோம். பெற்றாரின் வார்த்தைகள் மிகவும் சக்திவாய்ந்தவை, ஆறுதல் தரக்கூடியவை, அதனால் ஊக்கம் தரும் வகையில் அழகான வார்த்தைகளை பேசுவோம். அவர்கள் ஏதேனும் சொல்ல வந்தால் நாம் அமைதியாக செவிமடுப்பதை பிள்ளைக்கு உணர்த்துவோம். எமது தடுமாற்றத்தை அல்லது டென்ஷனை அவர்களிடம் காட்டாதிருப்போம். 


2. கோரிக்கைகளை தவிர்த்துக் கொள்வோம் 
நீ எப்படியோ சித்தியடைய வேண்டும் என்றோ, நீ சித்தியடைவது தான் எங்கள் எதிர்பார்ப்பு என்றோ, அல்லது சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முறையில் வேண்டுகோள்கள், அழுத்தங்கள் கொடுப்பது நல்லதல்ல. இந்த முக்கியமான நேரத்தில் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். நாம் தைரியமாக இருந்து பிள்ளையை எமது அழகான வார்த்தைகள் மூலம் தைரியப்படுத்துவோம். 


3. மனச்சோர்வை புரிந்து கொள்வோம் 
பிள்ளை பரீட்சை பற்றி மனச்சோர்வாக இருக்கக் காணும் போது அதை புரிந்துகொண்டு அவசரப்பட்டு பொருத்தமற்ற எதனையும் சொல்லிவிடாமல்… பிள்ளை செய்வது அவருக்கு போதுமானது என்பதை தெரியப்படுத்துவோம்.. மற்றவர்களுடன் போட்டியிடுவதற்காக நீங்கள் படிப்பதில்லை, உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் அதை காணவுமே படிக்கிறீர்கள் என்று எடுத்துக்கூறுவோம். 


4. நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்க வழிகாட்டுவோம் 
நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொடுப்போம்.. உதாரணமாக...... 
▪️ நான் தைரியசாலி.. 
▪️இந்தப் பரீட்சையில் நான் சிறப்பாக செயற்படுவேன்.. 
▪️நான் படித்திருக்கிறேன்.. 
▪️எனக்கு பதில்கள் தெரியும்.. 
▪️என்னால் தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும்.. என்று சொல்லுமாறு சொல்லிக் கொடுப்போம். 


5. நல்ல சிந்தனையை உருவாக்குவோம்
"நல்ல சிந்தனையால் மட்டுமே வெற்றியாளராக ஆகமுடியும்".. அதனால் 
▪️'என்னால் முடியும்', 
▪️'நான் சாதிப்பேன்' என்ற எண்ணங்களை மனதிற்கு கொண்டுவருமாறு எடுத்துக்கூறலாம். 


6. ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்வோம்.. 

பிள்ளையை மற்றப்பிள்ளைகளோடு ஒப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வோம். பிள்ளைக்கும் தன்னை எந்தப் பிள்ளையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்பதையும் எடுத்துச் சொல்வோம். மற்ற பிள்ளைகள் எப்படிச் செய்வார்கள் என்று எண்ணுவதை விட்டுவிட்டு, உங்கள் திறன்கள் மீது அவதானம் செலுத்துங்கள் என்றும் சொல்லிக் கொடுப்போம்.. 


7. கவலைப்படத் தேவையில்லை என்பதை உணர்த்துவோம்...

 பிள்ளை கவலையோடு இருக்கக் கண்டால், பரீட்சை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்களையே சங்கடப்படுத்திக்கொள்ள வேண்டியதுமில்லை. ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை அழகாக பயன்படுத்தி உங்களால் முடிந்தவரை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள்... என்று எடுத்துக் கூறலாம். 


9. பிள்ளையின் தலை தடவி பிரார்த்திப்போம்.

எங்கள் பிரார்த்தனை பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுக்கும். பெற்றாரின் அழகான பிரார்த்தனைகள் மிகவும் பலமானவை என்று நாம் அறிவோம்... 

அன்பின் பெற்றோர்களே..! 
பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளின் பரீட்சை பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றோம். எங்கள் வழிகாட்டுதலும் ஆதரவும் அவர்களின் கல்விப் பயணத்தில் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வோம். 
உங்கள் பிள்ளை மனதைரியத்துடன் பரீட்சைக்கு முகம்கொடுத்து, நல்ல பெறுபேறுகள் பெற்று கல்விப் பயணத்திலும் வாழ்க்கை பயணத்திலும் பயனுள்ள வெற்றிகள் பெறவேண்டும் என்று நாமும் மனம் திறந்து பிரார்த்தனை செய்கிறோம்...🤲🤲🤲🤲🤲 ✍️ 

நன்றி: அஸ்ஹர் அன்ஸார். 
(மனோதத்துவ ஆலோசனை, நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்)


 Previous post:



உ.தர பரீட்சை: பெற்றோருடன் சில நிமிடங்கள்... உ.தர பரீட்சை: பெற்றோருடன் சில நிமிடங்கள்... Reviewed by Irumbu Thirai News on November 10, 2025 Rating: 5
Powered by Blogger.