சஜித் பிரதமர் ஆகலாமா!!??

2004 பெப்ரவரி...காலி மாவட்டத்தின்_  பெந்தோட்டை ஹோட்டல் நிஷப்தத்தில் உறைந்து போய் இருந்த ஒரு அதிகாலை நேரம்.வார இறுதி விடுமுறையைக் கழிக்கத் தனது பாரியாருடன் வந்து இருந்த பிரதமர் ரணில் தொலை பேசி அடித்த போது வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்.' ஹலோ ' சொன்னார்.மறுமுனை ஏதோ சொன்னது.' நோ, நெவர், இம்பாஸிபல்' என்றார்.நழுவி விழப் போன ரிஸீவரை இறுகப் பற்றிக் கொண்டார்.ரிஸீவரைப் பிடிக்கப் போராடிக் கொண்டு இருந்த போது அவரது இரண்டே கால் வருட ஆட்சி ஜனாதிபதி சந்திரிக்காவால் அதிரடியாகக் கலைக்கப்பட்டு இருந்தது..

மறு முனையில் தொலைபேசி அழைப்பில் இருந்தது ரணிலின் ஆஸ்தான சகா மலிக் சமரவிக்கிரம...பதட்டத்துடன் தயாரானார் ரணில்..

'எரிக் சொல்ஹேய்ம் , ஜார்ஜ் டப்ளிவ் புஷ், கொபி அனான் எல்லோரிடமும் பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்று சந்திரிக்கா சொன்னாரே ? எப்படிக் கலைத்தார் ?' குழப்பத்தின் ரேகைகள் உடம்பெங்கும் பரவ கொழும்பை அடைந்த ரணிலை சூழ்ந்து கொண்டார்கள் கட்சியினர்....

"2001 இல் பொருளாதாரத்தில் பாதாளத்தில் இருந்த நாட்டைப் பாரமெடுத்து கடன் எல்லாம் கட்டி புலிகளுடன் சமாதானம் ஒப்பந்தம் செய்து நாடு அமைதிப்பூங்காவாகி இருக்கிறது .இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் போர் விரும்பிகளான ஜே.வி.பி இன் துணையோடு சந்திரிக்கா கலைத்து துடைத்து எறிந்தார்" என்று சர்வதேச ஊடகங்களிடம் புலம்பினார்.

'புலிகளுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து வளங்களை விற்று தன்னிச்சையாகத் தொழிற்பட்டார் ரணில்' என்று அரச ஊடகங்கள் பிரச்சாரத்தை முடக்கிவிட்டன."இந்த மண்ணுக்குப் பொருத்தமே இல்லாத சொசேஜஸ் தின்னும் மாடுகள்" என்று ரணிலையும் ரணிலுடன் இருந்த கூட்டத்தையும் விமர்சித்தார் விமல் வீரவன்ச..

தேர்தல் நெருங்கியது.. சர்வதேசம் எல்லாம் ரணில் ரணில்...உள்ளூர் ஊடகங்களில் சக்தியும் சிரஸவும் அப்போது  ரணிலைக் கொண்டாடின..முள்ளுக் கம்பிக் கூட்டில் இருந்து பூந்தோட்டம் உருவாகப் போவது  போல இருந்த சமயம் அந்தக் கனவு கலைக்கப்பட்டுவிட்டதாக ஒரு விளம்பரத்தை அப்போது சிரஸ அடிக்கடி ஒளிபரப்பியது..சக்தி, சிரஸவில் வேலை செய்பவர்கள் எல்லாம் புலிகள் என்றார் விமல் வீரவன்ச.....

தேர்தல் நெருங்கியது..அடிமட்ட சிங்களவர்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்ற ரணில் ' சமாதானம், சமாதானம் ' என்றார்..சமஷ்டி கொடுக்கவில்லை..சுயாட்சி என்றார்..சிரிபாலாக்களுக்கும் அமரசேனாக்களுக்கும் இந்த மொழி புரியவில்லை..ரணிலை வேற்றுக் கிரகவாசியாய்ப் பார்த்தனர்.எதிர்பார்த்தது போலவே யூ.என்.பி 82 ஆசனங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.....

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிலமைதான் இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது..அப்போது போலவே தனக்காய்ப் பாடுபட்டு கட்சியை வெல்வதற்கு வியர்வை சிந்திய தொண்டர்களைக் கவனிக்கவில்லை ரணில்..ரணிலை விமர்சிக்கும் காரணங்கள் அப்படி அப்படியே தான் இருக்கின்றன..புதிதாய் மத்திய வங்கி கொள்ளை வேறு..ஆனால் ஊடக பலமே ரணிலுக்கு இல்லை.அப்போது தோள் கொடுத்த  சிரஸ எப்போது எகிறுகிறது..'தரை மேலே பிறக்க வைத்தான் எங்களை டீ என்.எல் பார்க்க வைத்தான்' என்று யூ என்.பி ரசிகர்கள் அண்டெனாவை திருப்பியபடி ரணிலின் அண்ணனின் டீ என்.எல் தொலைக்காட்சி முன்னாள் குவிந்து கிடக்கின்றனர்..அது வேற மழை பலமாய் வந்தால் வேலை செய்யாது..

சிரிசேனா செய்து இருக்கும் அரசியல் யாப்பு  மீறலை உச்ச நீதிமன்றம் எப்படிப் பார்க்கப் போகிறது என்று தெரியவில்லை..நெருக்கடி நிலமை என்ற பேரில் பாராளுமன்றத்தைக் கலைத்து இருக்கிறார்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ' சிரிசேனா செய்தது சரி ' என்று வந்தால் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.இப்போது இருக்கும் நிலையில் மகிந்த வெல்லப் போவது தெள்ளத் தெளிவு..தோல்வியின் பரிமாணத்தைக் கொஞ்சமாவது குறைத்து குறைந்தது 85 ஆசனங்களையாவது யூ.என்.பி தனித்துப் பெற விரும்பினால் ரணில் உடனே பதவி விலக வேண்டும்...

ரணிலின் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது ஜனநாயகத்திற்கு அடிக்கும் கடைசி ஆணி...130 ஆசனங்களுக்கு மேல் பெற்று மகிந்த - சிரிசேனா தரப்பு வெற்றி பெற்றால் மிச்சம் உள்ள ஆட்களை யூ என்.பி இல் இருந்து வாங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசியல் யாப்பை மீண்டும் மாற்றும்.அது நிச்சயம்.அப்போது நடக்கப் போகும் மகிந்த - சிரிசேனா உரசல்கள் வேறு சேப்டர்....

சஜித் பிரேமதாஸ பற்றிய சரியான விம்பம் ஒன்று எமக்கில்லை..அவர் தேசிய பிரச்சினைகள் பற்றி எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை..ஆனால் சிங்கள வாக்குகளை அள்ள யூ.என்.பி இற்கு சஜித்தை தலைவராக்குவதைத் தவிர வேறு வழியில்லை..இல்லாவிட்டால் படுமோசமான தோல்வி யூ.என்.பி இற்குக் காத்து இருக்கிறது....

Zafar Ahamed
சஜித் பிரதமர் ஆகலாமா!!?? சஜித் பிரதமர் ஆகலாமா!!?? Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.