சாதிக்காக கொலை செய்வது கெளரவமா?

அடுத்தடுத்து நம்மைக் கதிகலங்க அடிக்கும் சாதிவெறிக் கொலைகள் ஒன்று மாற்றி ஒன்று அரங்கேறிய வண்ணமுள்ளன.  தமிழ்த் தேசியம் பேசுவோர், திராவிடம் பேசுவோர் அனைவரும் இந்த மாதிரியான கொலைகளை வேடிக்கையக மாத்திரம் தான் பார்ப்பார்கள்..

தற்போது நந்தீஷ் – சுவாதி காதல்களரின் படுகொலை.  மிகக் கொடூரமானது. சாதி மனிதனை நச்சுப் பாம்பாக்கும் எனக் கூட சொல்ல முடியவில்லை. பாம்புகளுக்குத் தற்காப்புக்கே நஞ்சு உதவுகிறது. ஆனால் சாதிவெறிப் பாம்புகள் மிகக் கொடியவை. உலகில் எங்கும் காண முடியாதவை. எந்த அறிவியலும் இல்லாமல் முழுக்க முட்டாள்தனமான கருத்தியல்களின் அடிப்படையில் அரங்கேறும் வன்முறைகளே காதல் கொலைகள்.

மருத்துவர் ராமதாஸ் போன்றோர் நாடகக் காதல் எனக் கூறி காதல் இணையர்கள் மீது பொங்கி எழுவதற்கு என்ன காரணம்? ஏனென்றால் என்றும் இல்லாத அளவுக்கு இன்று அலை அலையெனக் காதலர்கள் உருவாகி வருகின்றனர். கல்விக் கூடத்தில், பணியிடத்தில் ஒன்றாகப் பழகும் பெண் ஆண்களை காதல் என்னும் இயற்கை உணர்ச்சி சாதிச் சகதியிலிருந்து விடுவிக்கிறது. எனவேதான் இந்தச் சாதிவெறித் தலைவர்கள் பதற்றமடைகிறார்கள். காதலுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

நாடகக் காதல் என்ற சாதிவெறிக் கருத்தியலின் பின்னணியில் அடுத்தடுத்து சாதிமாறி திருமணம் செய்த இணையர்களைக் கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் கொலைகளை எப்படி வர்ணிப்பது என்பதில் விவாதமும் உள்ளது.

நம் முற்போக்காளர்களில் பலர் "கௌரவக் கொலை" எனச் சொல்வதே குற்றம் என்பதாகக் கருதி, அதனை ஆணவக் கொலையாக மாற்றப் பார்ப்பதால் எழும் சிக்கலிது.

சாதியாதிக்கத்தில் நடக்கும் கொலைகளில் காக்கப்படுவது தனிமனித கௌரவம் அன்று, குடும்பத்தின் கௌரவம். கொளரவக் கொலை என்றால் என்ன? எனப் புரிந்து கொள்வற்கு, அதன் பின்னால் உள்ள வரலாற்று உண்மைகளை அறிவியல் நோக்கில், சட்ட நோக்கில் புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் தெளிவு பிறக்கும்.

சாதி வெறியர்கள் காதல் உணர்வுகளை அழித்தொழிக்கும் நோக்கில் செய்யும் கொலைகள் பல காலமும் "கௌரவக் கொலைகள்" என்றே ஊடகங்களாலும், சமூகச் செயற்பாட்டாளர்களாலும் அறியப்பட்டு வந்தன. ஆனால் சிலர் அண்மைக் காலமாக "கொளரவக் கொலை" என்னும் சொல்லே தவறானது என வாதிடுகின்றனர். சாதிவெறி தலைக்கேற ஓர் உயிரையே அழித்தொழிக்கும் நோக்கம் எப்படி "கௌரவம்" ஆகும் என்றும், சாதித் திமிரில் நிறைவேற்றப்படும் இத்தகைய கொலைகளை "ஆணவக் கொலை" என்றே அழைக்க வேண்டும் என்றும் ஓங்கி ஒலிக்கின்றனர். இந்தக் கருத்தின் தாக்கத்தில் இன்று சில தொலைக்காட்சி ஊடகங்களும் "கௌரவக் கொலை" என்னும் சொல் துறந்து, "ஆணவக் கொலை" என உரையாடத் தொடங்கியுள்ளன. "ஆணவக் கொலை" என்னும் சொல்லைப் பயன்படுத்த விரும்புவோரின் நோக்கில் பிழையொன்றுமில்லை. சாதித்திமிரும், ஆணவமுமே காதல் இணைகளை அழிக்கும் கொலைகளுக்குக் காரணமாக இருக்கையில், இதில் என்ன "கௌரவம்" வேண்டிக் கிடக்கிறது எனச் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டோர் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது. ஆனால் சட்டத் தர்க்கமாகாது.

சாதிவெறிக் கொலைகளை "கௌரவம்", அதாவது honor என்னும் சொல் கொண்டு குறிப்பதே உலகச் சட்ட நடைமுறையாக உள்ளது. இந்தச் சொல்லையே ஐநா, ஆம்னஸ்டி உள்ளிட்ட அமைப்புகளும் பயன்படுத்துகின்றன. ஆங்கில அகராதிகள் வரையறுப்பின்படி, கௌரவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் ஆண் மகன் தனது குடும்பத்தின் பெண் செய்யும் நடவடிக்கையால் அதன் கௌரவம் குலைக்கப்பட்டதற்காக அப்பெண்ணைக் கொலை செய்வதாகும். (honor killing - a male member of the family kills a female relative for tarnishing the family honor). இப்படி "குடும்ப கௌரவம்" காக்கச் செய்யப்படும் கொலைகள் "கௌரவக் கொலைகள்" என்றும், குடும்பத்தின் கௌரவம் காக்கும் பொருட்டு அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்தல், கட்டாயத் திருமணம் செய்து வைத்தல், சித்திரவதை செய்தல் போன்ற செயல்கள் "கௌரவக் குற்றங்கள்" (honor crimes) என்றும் அழைக்கப்படுகின்றன. குடும்ப கௌரவம் காக்கும் பொருட்டு, ஆண் மகன் கொலை செய்யப்பட்டாலும் அது கௌரவக் கொலையில்தான் அடங்கும் எனப் பன்னாட்டு வரையறைகள் கூறுகின்றன.
கொளரவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச் சட்டங்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களின் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன. பிரெஞ்சு, அராபியம், ஸ்பானியம் என அனைத்து மொழிகளிலும் "கொளரவக் குற்றங்கள்", "கௌரவக் கொலைகள்" என்றே அறியப்படுகின்றன. உலகின் அனைத்து நாடுகளும், ஏன், பாகிஸ்தான், சவுதி, ஈரான், ஈராக் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளுங்கூட தங்கள் நாடுகளில் "கொளரவக் குற்றங்கள்" இருப்பதாக ஒப்புக் கொண்டு அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் இந்தியா மட்டுந்தான் அத்தகைய கௌரவக் குற்றங்களோ, கௌரவக் கொலைகளோ எங்கள் நாட்டில் நடக்கவில்லை எனத் துணிந்து பொய்யுரைத்து வருகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஐநாவின் சமூக, மாந்தநேய மற்றும் பண்பாட்டுக் குழு கொளரவக் கொலை தொடர்பாக நடத்திய கருத்தரங்கில் எங்கள் நாட்டில் கௌரவக் கொலை என்ற ஒன்றே இல்லை எனக் கூறியது இந்தியா. இல்லாததை இருப்பதாகப் புனைவதும், தெளிவான உண்மைகளையே மூடி மறைப்பதுந்தானே பார்ப்பனியம். அதைத்தான் இந்தியா செய்து வருகிறது.

உள்ளபடியே இந்தியச் சூழலில் குடும்பத்தின் கௌரவம் என்பது பெண்ணின் கற்பில் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதால், தாக்குதல் பெண்ணின் மீதுதான் நடைபெறுகிறது. பார்க்கப் போனால் உயர்சாதி ஆண்மகன் கீழ்ச்சாதி பெண்ணை மணந்தால் பெரும் சிக்கல் எழுவதில்லை. குறிப்பாக தலித் ஆண்மகனை மணக்கும் உயர்சாதிப் பெண்தான் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் சாதிவெறிக்குப் பலியாகிறாள். எனவே இதனை தலித் மக்களுக்கு எதிரான வன்முறை எனச் சுருக்கி விட முடியாது. இது ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தின் சாதி கௌரவம் காக்கும் பொருட்டு செய்யப்படும் குற்றங்கள், கொலைகள் ஆகும். இந்திய, தமிழ்ச் சூழலில் இந்தச் சாதி கௌரவம் ஒடுக்கப்பட்ட ஆண்களின் மீதும் பாய்வதால் கௌரவக் குற்றங்களால் பாதிக்கப்படுவோரின் பட்டியலில் உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி பெண்களுடன் ஆண்களும் சரி சமமாக அடங்குவர். எனவே நமக்கு உடனடியாக கொளரவக் கொலைகள், கொளரவக் குற்றங்கள் (honor killings and honor crimes) ஆகியவற்றுக்கு எதிரான தனிச் சட்டம் தேவை.

எனவே ஆணவக் கொலை என்று மக்களிடம் சாதி எதிர்ப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதில் எத்தவறும் இல்லை. ஆனால் "கௌரவக் கொலை" என்னும் சொல்லுக்கு எதிராகப் பேசினால், நாம் அதன் பின்னுள்ள சட்ட நியாயத்தை உலக நாடுகளுக்குப் புரிய வைப்பதில் தோற்று விடுவோம். அது சாதிய ஆதரவாளர்களுக்கு, காதல் எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பாகிப் போகும்.
நாம் துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும். எந்தத் தயக்கமும் தேவையில்லை. 21 வயது ஆணும் பெண்ணும் காதலிப்பது, திருமணம் புரிவது, அல்லது திருமணமின்றி ஓர் இல்லத்தில் சேர்ந்து வாழ்வது, எல்லாம் அவர்களின் அடிப்படை உரிமை. இதில் பெற்றோர் மூக்கை நுழைப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் பெற்றோம், சீராட்டினோம், பாராட்டினோம் என்றெல்லாம் கூறி, காதலை முடக்க நினைப்பது வெறும் உணர்வு மிரட்டலே. பாசமன்று. பாசமிருந்தால், பிள்ளைகளின் இன்பத்தில் பங்கெடுப்பதே நேர்மையானதாக இருக்கும். அதை விடுத்து சாதித் திமிரில் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரைத் தூக்கி எறிவதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

கௌரவக் கொலை தடுக்கத் தனிச் சட்டம் தேவையில்லை, இருக்கும் சட்டங்களே போதுமானவை என்பதே பாஜக, காங்கிரஸ் இரண்டின் கொள்கையாகும். எனவேதான் இரு கட்சிகளுமே கௌரவக் கொலை, கௌரவக் குற்றங்களுக்கெனத் தனிச் சட்டம் இயற்றாமல் நாள் கடத்தி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் பல பெண் விடுதலை அமைப்புகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, அன்றைய அமைச்சர் ப. சிதம்பரம் கௌரவக் கொலை தொடர்பான ஒரு சட்ட வரைவை உருவாக்கி அதனை அன்றைய அமைச்சர்க் குழுவுக்கு அனுப்பி வைத்தார். வரைவை அமைச்சர்க் குழுவுக்கு அனுப்பி வைப்பது என்பது அந்தச் சட்டத்தைத் தூக்கிப் பரணில் போடும் வேலையே என்பது நமக்குத் தெரிந்த செய்திதான்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டுமே கௌரவக் கொலைச் சட்டம் குறித்தெல்லாம் மூச்சு விடுவதில்லை. இரு கட்சிகளுமே 2014 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் கௌரவக் கொலைச் சட்டம் குறித்தெல்லாம் ஒரு கூட பேசவில்லை. சொல்லப் போனால் கௌரவக் கொலை என்ற சொல் கூட அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லை.

எனவே சாதி ஒழிப்பில், காதல் வாழ்வில் நம்பிக்கை வைத்துள்ள நம்மைப் போன்றோர், தமிழகத் தேர்தல் அரசியல் கட்சிகளைப் பார்த்துக் கேட்போம். சாதிவெறி ஒழிக்க, கௌரவக் குற்றங்களைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற உடனடி ஆதரவு கொடுங்கள் எனக் கேட்போம். இதற்காக இந்துத்துவ நடுவணரசை எதிர்நோக்கிக் காத்திருக்காமல், தமிழக அரசையே கொளரவக் குற்றங்கள் அனைத்துக்கும் எதிராகச் சட்டம் இயற்றச் செய்வோம். அதுவே அகமணம் உடைத்து, சாதியுடைத்து பெரியாரின், அம்பேத்கரின் கனவை நனவாக்கும், சமத்துவத் தமிழ்த் தேசம் படைக்கும்.

#நலங்கிள்ளி
சாதிக்காக கொலை செய்வது கெளரவமா? சாதிக்காக கொலை செய்வது கெளரவமா? Reviewed by Tamil One on November 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.